35 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1700-ஐ தாண்டியது


35 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1700-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 23 Sep 2021 11:55 PM GMT (Updated: 23 Sep 2021 11:55 PM GMT)

தமிழகத்தில் 35 நாட்களுக்கு பிறகு நேற்று கொரோனா பாதிப்பு மீண்டும் 1,700-ஐ தாண்டியது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு 19-ந்தேதி 1,702 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏற்றம் இறக்கமாக இருந்து வந்த தினசரி பாதிப்பு, 35 நாட்களுக்கு பின்னர் நேற்று (வியாழக்கிழமை) 1,700-ஐ கடந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 59 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 953 ஆண்கள், 792 பெண்கள் என மொத்தம் 1,745 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 226 பேரும், சென்னையில் 222 பேரும், ஈரோட்டில் 116 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குறைந்த பட்சமாக தென்காசி, பெரம்பலூரில் தலா 6 பேரும், ராமநாதபுரத்தில் 5 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட 81 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 299 முதியவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

27 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 50 லட்சத்து 11 ஆயிரத்து 564 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் 15 லட்சத்து 48 ஆயிரத்து 93 ஆண்களும், 11 லட்சத்து 3 ஆயிரத்து 984 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேர் உள்பட 26 லட்சத்து 52 ஆயிரத்து 115 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 98 ஆயிரத்து 951 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 82 ஆயிரத்து 869 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 19 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 8 பேரும் என 27 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 5 பேரும், தஞ்சாவூரில் 4 பேரும், திருவள்ளூரில் 3 பேரும், கோவை, ராணிப்பேட்டையில் தலா இருவரும், செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திருப்பூர், விழுப்புரம், விருதுநகரில் தலா ஒருவரும் என 16 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 35 ஆயிரத்து 427 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

1,624 பேர் ‘டிஸ்சார்ஜ்’

தமிழகத்தில் நேற்று 40 ஆயிரத்து 840 ஆக்சிஜன் படுக்கைகள், 25 ஆயிரத்து 468 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 8 ஆயிரத்து 176 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 74 ஆயிரத்து 484 படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ளன.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,624 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 246 பேரும், சென்னையில் 183 பேரும், ஈரோட்டில் 152 பேரும் அடங்குவர். இதுவரையில் 25 லட்சத்து 99 ஆயிரத்து 567 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 17 ஆயிரத்து 121 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story