தமிழகத்தில் யானைகளை தனிநபர்கள் கட்டுப்பாட்டில் வைக்க சென்னை ஐகோர்ட்டு தடை


தமிழகத்தில் யானைகளை தனிநபர்கள் கட்டுப்பாட்டில் வைக்க சென்னை ஐகோர்ட்டு தடை
x
தினத்தந்தி 24 Sep 2021 12:38 PM GMT (Updated: 24 Sep 2021 12:38 PM GMT)

தமிழகத்தில் இனிமேல் யானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,


கோவில் யானைகள் பராமரிப்பு தொடர்பான வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு இன்று விசாரணைக்கு எடுத்து கொண்டது.  இதில், தமிழகத்தில் கோவில் யானைகள், வளர்ப்பு யானைகள், வனத்துறை யானைகளின் எண்ணிக்கை, அவற்றின் வயது, உடல்நிலை குறித்த அறிக்கையுடன், அவற்றின் வீடியோ பதிவையும் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கோவில்களின் கட்டுப்பாட்டில் 32 யானைகளும், தனியார் கட்டுப்பாட்டில் 31 யானைகளும், வனத்துறை கட்டுப்பாட்டில் 67 யானைகளும் உள்ளதாகவும், அவற்றை வீடியோ பதிவு செய்யும் பணிகள் நடந்து வருவதால், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று, வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், இனிமேல் தமிழகத்தில் தனியார் எவரும் யானையை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது என உத்தரவிட்டனர். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் வளர்ப்பு யானைகள், கோவில் யானைகள், வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த யானைகள் குறித்த விவரங்களையும் தாக்கல் செய்ய நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.


Next Story