ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்


ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 24 Sep 2021 7:14 PM GMT (Updated: 24 Sep 2021 7:14 PM GMT)

ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மத்திய அரசுக்கு நன்றி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் வறுமையினால் வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தேசிய அளவில் ஒரு முடிவினை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் கடிதம் எழுதினேன். இதுதொடர்பான வழக்கினை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகின்றது.

இந்த சூழ்நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் நோக்கில் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் தற்கொலை செய்துகொண்டோரின் குடும்பத்துக்கும் இந்த ரூ.50 ஆயிரம் இழப்பீடு பொருந்தும் என்றும் மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் முடிவுக்கு அ.தி.மு.க. சார்பில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

முரண்பாடு

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாக தகவல்கள் வந்தபோது, தமிழக அரசு எந்த விதமான நிவாரணமும் கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு வழங்காத நிலையில், அதை குறைத்து காட்டவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை. ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும்போது கொரோனா உறுதி செய்யப்பட்டு பின்னர் மாரடைப்பு காரணமாகவோ அல்லது நுரையீரல் பாதிப்பு காரணமாகவோ உயிரிழந்தநிலையில், அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா இல்லை என்ற முடிவு வந்தால் அவருடைய உயிரிழப்புக்கு காரணம் கொரோனா இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

ஐ.சி.எம்.ஆர். (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) வழிகாட்டு நெறிமுறைகளுக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூற்றுக்கும் முரண்பாடு உள்ளது. எனவே கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ளபடி, அனைவருக்கும் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறதா? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டு நெறிமுறைகளின்படி இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறதா? என்பதை உறுதி செய்யவேண்டும். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, அனைத்து குடும்பத்தினருக்கும் இழப்பீடு சென்றடைவதை உறுதி செய்யவேண்டும் என்றும் நான் முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

வழிகாட்டு நெறிமுறைகளின்படி

தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டிய நிலை உருவாகிவிட்டது. கொரோனாவால் உயிரிழந்த அனைத்து குடும்பத்தினருக்கும் இழப்பீடு சென்றடையும் வகையில், ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டு நெறிமுறைகளின்படி இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறதா? என்பதை உறுதி செய்யவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story