வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்


வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 24 Sep 2021 11:20 PM GMT (Updated: 24 Sep 2021 11:20 PM GMT)

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து அரசுத் துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

வடகிழக்கு பருவ மழை காலம் தொடங்க உள்ளதை முன்னிட்டு பொதுமக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும், பயிர்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

புயல் வெள்ள காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திட்டமிட்டு, குடிசைப்பகுதி மக்கள் உள்ளிட்ட அனைத்துதரப்பு மக்களும் பாதிப்புக்கு ஆளாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பேரிடர் காலங்களில், மக்கள் துயர் நீக்கம் என்ற ஒரே நோக்கத்தோடு அரசு துறைகள் ஒன்றாக இயங்க வேண்டும். வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டிற்கு, 448.0 மி.மீட்டர் மழை இயல்பாக கிடைக்க பெற்றது. இது தமிழ்நாட்டின் ஒரு ஆண்டுக்கான இயல்பான மழை அளவில், 47.32 சதவீதம் ஆகும். வடகிழக்கு பருவமழை காலத்தில் கிடைக்கப் பெறும் மழைப்பொழிவைச் அதிகமாக சார்ந்து தமிழகம் உள்ளது.

தொடர்பு எண் தயார்

பேரிடரின்போது சேதங்களை தடுக்கும் பணியில், மாநில அரசின் துறைகள் மட்டுமல்லாமல், தேவைக்கேற்ப, ராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோரக்காவல் படை, இந்திய வானிலை ஆய்வு மையம், ஒன்றிய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிந்து, பேரிடர் சேதங்களை தவிர்க்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையுடன் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங் கள் 24 மணி நேரமும் இயங் கக்கூடிய வகையில் வலுப்படுத்தப்பட்டு உள்ளன. மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் பொதுமக்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தயார் நிலை

புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், நிவாரண மையங்களும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அங்கு தங்கியிருப்போருக்கு அடிப்படை வசதிகளை திட்டமிட்டு வைத்திருக்கவேண்டும்.

பாதிப்புக்குள்ளாகக்கூடிய ஒவ்வொரு பகுதிகளிலும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து, நிவாரணப் பொருட்கள் தாமதமின்றி மக்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும்போது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

புயலின் சீற்றம் காரணமாக மரங்கள் விழும் என்பதால், பலவீனமான மரங்களையும், முறிந்து விழக்கூடிய மரக்கிளைகளையும், முன்கூட்டியே அகற்றவும், புயலின்போது விழும் மரங்களையும், மின் கம்பங்களையும் உடனடியாக அகற்றுவதற்கு குழுக்கள் அமைத்து நீங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பாதிப்பிற்கு பின் உடனடியாக மின் விநியோகத்தை சரி செய்வதில் அதிக கவனம் செலுத்தி அதை முன்னுரிமைப்படுத்த வேண்டும்.

வெள்ள பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்பதற்குத் தேவையான படகுகளை தயாராக வைத்திருந்து, தேவைப்படும் இடங்களில், தேசிய பேரிடர் மீட்புக்குழு, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினரை முன்கூட்டியே நிலைநிறுத்த வேண்டும்.

அனைத்து ரேஷன் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு போதுமான அளவு வைத்திருக்க வேண்டும். உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்களை போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும். கனமழை, புயல், வெள்ளத்தினால் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து, உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

சென்னையில்.....

சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்நிலைகளின் நீர் இருப்பு இப்போது 79 சதவீதமாக இருக் கிறது. பெருமழையின்போது அங்கு நீர் இருப்பை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கனமழையால் கிடைக்கும் தண்ணீர் வீணாகாமல் குளங்கள், ஏரிகள் போன்றவற்றின் நீர்வழிக் கால்வாய் கள் மூலம் சேமித்து வைப்பதற்கும் ஒரு செயல் திட்டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும்.

மழை, வெள்ள நீர், தங்குதடையின்றி வெளியேற்றி சாலைகளில் தண்ணீர் தேங்காத நிலையை ஏற்படுத்த வேண்டும். ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் அனுப்ப வேண்டும். வடகிழக்குப் பருவமழை காலத்தில் உயிர், உடமை சேதங்கள் ஏற்படுவதை தடுக்க அனைத்து அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்து துரிதமாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், வி.செந்தில் பாலாஜி, மா. சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story