பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஈரோடு-நாமக்கல் இடையே போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்


பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஈரோடு-நாமக்கல் இடையே போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்
x
தினத்தந்தி 1 Oct 2021 6:29 AM GMT (Updated: 1 Oct 2021 6:29 AM GMT)

பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களிடையே போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு,

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பேருந்து நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கடந்து 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நள்ளிரவு 1 மணி முதல் விடிய, விடிய மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. 

பள்ளிப்பாளையம் பேருந்து நிலையம், காவல்நிலையங்கள், பிரதான சாலைகள் என பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. இதனை தொடர்ந்து இன்று கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுப்பாலத்தின் மீது வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளிப்பாளையத்தில் இருந்து வரும் தண்ணீரானது, பாலத்தின் மீது சென்று காவிரி ஆற்றில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பாலமாக கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுப்பாலம் உள்ளது. இங்கு பழைய பாலம், புதிய பாலம் என இரண்டு பாலங்கள் உள்ளன. இந்த இரண்டு பாலங்கள் வழியாகவும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் இந்த பாலத்தின் வழியாகத்தான் ஈரோட்டுக்கு வர வேண்டும். 

அதே போல ஈரோட்டில் இருந்து சேலம், நாமக்கல், பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு போன்ற பகுதிகளுக்கு இந்த காவிரி ஆற்றுப்பாலம் வழியாகத்தான் பேருந்துகள் செல்ல வேண்டும். தினமும் இந்த வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன. 

இதில் பழைய பாலம் சற்று உயரம் குறைவாகவும், புதிய பாலம் சற்று அதிகமான உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிப்பாளையத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, பழைய பாலத்தில் அதிகமான வெள்ளநீர் சென்று கொண்டிருக்கிறது. 

இதனையடுத்து தற்போது ஈரோடு-நாமக்கல் மாவட்டங்களிடையே போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தினமும் பள்ளிப்பாளையத்தில் இருந்து ஈரோட்டுக்கு வேலைக்கு செல்பவர்கள் கால்நடையாகவே பாலத்தைக் கடந்து சென்று வருகின்றனர். வெள்ளநீர் வடிந்த பிறகு போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story