வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதில் அரசியல் உள்நோக்கம் இல்லை - ஐகோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் பதில் மனு


வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதில் அரசியல் உள்நோக்கம் இல்லை - ஐகோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் பதில் மனு
x
தினத்தந்தி 2 Oct 2021 8:45 PM GMT (Updated: 2 Oct 2021 8:45 PM GMT)

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதில் அரசியல் எதுவும் இல்லை என்றும், இந்த இடஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பும் இல்லை என்றும் சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அ.தி.மு.க., ஆட்சியின்போது, நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஏராளமான அமைப்புகள் வழக்குகள் தொடர்ந்துள்ளன. இந்த வழக்கிற்கு தமிழக அரசு ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டில் போட்டியிட முடியவில்லை என 1989-ம் ஆண்டுகளில் அளித்த கோரிக்கையின் அடிப்படையில், வன்னியர்கள் உள்ளிட்ட 106 சாதியினரை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர் என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவரின் அறிக்கையின் அடிப்படையிலும், மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையிலும் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சீர்மரபினர் மற்றும் பிற பிரிவினருக்கு முறையே 7 மற்றும் 2.5 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்காக வழங்கப்பட்ட இந்த தனி இட ஒதுக்கீட்டால் மற்ற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை.

தேர்தலில் குறிப்பிட்ட சாதியினரின் வாக்குகளை பெற அரசியல் உள்நோக்கத்துடன் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் கூறுவது தவறு.

முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்த தி.மு.க., தலைமையிலான புதிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், இந்த சட்டத்தை நிறைவேற்றியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

மேலும், வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. வன்னியகுல சத்திரியர் பிரிவில் 7 சாதியினர் உள்ளனர், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது பற்றி ஆய்வு செய்ய நீதிபதி குலசேகரன் கமிட்டி அமைக்கப்படவில்லை. தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்யலாமா, வேண்டாமா? என்பதை பற்றி ஆய்வு செய்யவே இந்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story