9-வது நாளாக தொடரும் புலியின் தேடுதல் வேட்டை..மக்கள் வெளியே வர வேண்டாமென எச்சரிக்கை


9-வது நாளாக தொடரும் புலியின் தேடுதல் வேட்டை..மக்கள் வெளியே வர வேண்டாமென எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 Oct 2021 5:49 AM GMT (Updated: 3 Oct 2021 5:49 AM GMT)

புலியை பிடிக்கும் வரை மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என்று வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் தேவன்-1, ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சி பகுதிகளில் ஊருக்குள் புலி புகுந்து கால்நடைகளை அடித்து கொன்றது. மேலும் கடந்த மாதம் 24-ந் தேதி தேவன்-1 பகுதியில் தொழிலாளி சந்திரன் என்பவரை அடித்து கொன்றது. உடனே புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். 

ஆனால் அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு மசினகுடி பகுதிக்கு புலி இடம்பெயர்ந்தது. தொடர்ந்து அங்கு குரும்பர்பாடியை சேர்ந்த மங்கல பஸ்வன் என்பவரை அடித்துக்கொன்றது. இதனால் அந்த ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தமிழக முதன்மை வன உயிரின காப்பாளர் சேகர் குமார் நீரஜ், அந்த ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டார். எனினும் தேசிய புலிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்படி மசினகுடி வனப்பகுதியில் புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், 9-வது நாளாக புலியை தேடும் பணி நடைபெற்று வருகிறது. தேடுதல் வேட்டையில் மோப்ப நாய்கள், டிரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  புலியை பிடிக்க சிறப்பு பயிற்சி பெற்ற 8 பேர் வருகை தந்துள்ளனர்.  புலியை பிடிக்கும் வரை மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என்று வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

புலி எக்காரணம் கொண்டு சுட்டுக்கொல்லப்படாது எனவும் உயிருடன் பிடிப்பதற்கான முயற்சிகள் மட்டுமே தற்போது நடப்பதாகவும் தமிழ்நாடு முதன்மை தலைமை வன உயிரின  பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

Next Story