மின்னல் தாக்கி குடோனில் பயங்கர தீ விபத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மஞ்சள் எரிந்து நாசம்


மின்னல் தாக்கி குடோனில் பயங்கர தீ விபத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மஞ்சள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 3 Oct 2021 7:02 PM GMT (Updated: 3 Oct 2021 7:02 PM GMT)

பவானி அருகே மின்னல் தாக்கியதில் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மஞ்சள் எரிந்து நாசம் ஆனது.

ஈரோடு,

ஈரோடு கவுந்தப்பாடியை அடுத்த பெரியபுலியூர் அருகே உள்ள வளையக்காரன்பாளையம் பகுதியில் ராஜேந்திரன் அகர்வால் என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இதில் மஞ்சள் மூட்டைகள் ஆயிரக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. மற்றொரு பகுதியில் மஞ்சள் அரவை மில்லும் உள்ளது.

இந்த குடோனில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். வழக்கம்போல் தொழிலாளர்கள் அனைவரும் நேற்று முன்தினம் வேலைக்கு வந்தனர். வேலை முடிந்ததும் அவர்கள் அனைவரும் 6 மணிக்கு வீட்டுக்கு சென்றுவிட்டனர். இதைத்தொடர்ந்து குடோன் பூட்டப்பட்டது.

மின்னல் தாக்கியது

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மஞ்சள் குடோனை மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மஞ்சள் குடோனின் சிமெண்டு மேற்கூரை உடைந்ததுடன், அங்கிருந்த மஞ்சள் மூட்டையிலும் தீப்பற்றியது. ஆனாலும் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை.

இதற்கிடையே மஞ்சள் மூட்டையில் பற்றிய தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால் கரும்புகை வெளியேறி அருகில் உள்ள கிராமங்களில் பரவியது.

எரிந்து நாசம்

தகவல் அறிந்ததும் 4 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர். மேலும் 6 தண்ணீர் லாரிகளும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டன. ஆனால் தீ கட்டுக்குள் வந்தபாடில்லை.

இதையடுத்து 3 பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் குடோனின் சுவர் பகுதி, ஷட்டர் பகுதி, ஜன்னல் பகுதி ஆகியவை இடித்து தள்ளப்பட்டன. தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சிக்கு பின்னர் தீ கட்டுக்குள் வந்தது. இந்த தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மஞ்சள் மூட்டைகள் மற்றும் எந்திரங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. இவற்றில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் எரிந்து நாசம் ஆகி உள்ளதாக தெரிகிறது.

Next Story