மக்களை பற்றி சிந்திக்காத ‘தி.மு.க. அரசுக்கு உள்ளாட்சி தேர்தலில் சரியான பாடம் புகட்டுங்கள்’ ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


மக்களை பற்றி சிந்திக்காத ‘தி.மு.க. அரசுக்கு உள்ளாட்சி தேர்தலில் சரியான பாடம் புகட்டுங்கள்’ ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 3 Oct 2021 8:48 PM GMT (Updated: 3 Oct 2021 8:48 PM GMT)

மக்களை பற்றி சிந்திக்காத தி.மு.க. அரசுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று விழுப்புரம் பிரசார கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

பலத்தை நிரூபிக்க நேரம்

தமிழகத்தில் ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்வதற்கு நேரம் போதாது, அந்தளவிற்கு எண்ணற்ற பல சாதனை திட்டங்களையும், தொலைநோக்கு திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார்.

இதனால்தான் 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆண்ட கட்சிக்கு மீண்டும் 32 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக மக்கள் வாய்ப்பு வழங்கி அழகுபார்த்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் நம்மை பிரிந்து சென்று விட்டார். அவரது மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, முதல்-அமைச்சராக பொறுப்பேற்று ஜெயலலிதா கடந்து வந்த பாதையில் அவர் வகுத்து தந்த திட்டங்களை அடிபிறழாமல் செயல்படுத்தினார்.

சில பல வியூகங்களால் நாம் 2021 தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது. 1½ சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டோம். வருங்காலத்தில் இது சரிசெய்யப்பட்டு நமது பலத்தை நிரூபிக்க நேரம் வந்துவிட்டது.

வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை

தி.மு.க. கொடுத்த வாக்குறுதி எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தி.மு.க. என்றால் கட்டப்பஞ்சாயத்து, இன்றைக்கு தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் நடக்கிறது. கடலூர் நாடாளுமன்ற உறுப்பினரே குற்ற செயலில் ஈடுபட்டிருக்கிறார் என்று தெரிந்தும் ஆளும்கட்சி என்பதால் அந்த வழக்கை துரிதப்படுத்தவில்லை. மக்களை பற்றி சிந்திக்காத தி.மு.க. அரசுக்கு உள்ளாட்சி தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story