மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து பருத்தி பஞ்சு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்


மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து பருத்தி பஞ்சு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
x
தினத்தந்தி 3 Oct 2021 11:24 PM GMT (Updated: 3 Oct 2021 11:24 PM GMT)

‘மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து பருத்தி பஞ்சு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

இந்தியாவின் துணிகள் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு மகத்தானது என்பதோடு மட்டுமல்லாமல், இந்தத் தொழிலின் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற பெண்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச பருத்தி பஞ்சு விலை தற்போது உச்சபட்ச உயர்வு விலையை எட்டியுள்ளதாகவும், சர்வதேச சந்தையிலிருந்து இறக்குமதி செய்யும் பஞ்சு விலை ஒரு கேண்டி ரூ.67 ஆயிரமாக உயர்ந்துவிட்டதாகவும், இதனால் உள்நாட்டிலும் பஞ்சு விலை ஒரு கேண்டி ரூ.55 ஆயிரத்திலிருந்து ரூ.60 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் உள்ள நூற்பாலைகள் வசம் இருந்த பஞ்சு கையிருப்பு முற்றிலும் தீர்ந்துவிட்டதாகவும், தற்போது அதிக விலை கொடுத்து பஞ்சு வாங்க வேண்டியுள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக நூற்பாலைகளின் உற்பத்திச் செலவினம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் ஜவுளித்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஆடைகளின் விலையும் அதிகரிப்பு

பஞ்சு விலை உயர்வு காரணமாக, ஆடைகளின் விலையும் 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரும், நுகர்வோரும் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, பண்டிகைகள் மற்றும் திருமணங்களை முன்னிட்டு ஆடைகள் வாங்குவோரின் சுமை கூடுகிறது. பஞ்சு விலை என்பது சர்வதேச சந்தையை ஒட்டியும், மத்திய அரசின் ஏற்றுமதி-இறக்குமதி கொள்கைக்கு ஏற்பவும் அமைந்துள்ளது.

என்றாலும், இந்த தொழில் மூலம் தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாய் வருகிறது என்பதையும், இந்தத் தொழிலில் தமிழ்நாட்டின் பங்கு அதிகம் இருக்கிறது என்பதையும் கருத்தில்கொண்டு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நடவடிக்கை எடுக்கவேண்டும்

எனவே, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுத்து, பஞ்சு விலையை குறைக்கவும், ஆடைகளின் விலை உயராமல் பார்த்துக் கொள்ளவும், இந்த தொழில் தொடர்ந்து வளர்ச்சியடையவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story