ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூடுதல் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்


ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூடுதல் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 4 Oct 2021 7:56 PM GMT (Updated: 4 Oct 2021 7:56 PM GMT)

‘‘ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வினர் கூடுதல் விழிப்புணர்வுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்’’ என, எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை,

இதுகுறித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஊரக உள்ளாட்சி தேர்தல்

9 மாவட்டங்களுக்கு முழுமையாக ஊரக உள்ளாட்சி தேர்தல்களும், 28 வருவாய் மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்களும், நாளையும், 9-ந்தேதியும் நடைபெற உள்ளன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் மக்கள் பேரியக்கமான அ.தி.மு.க.வுக்கு தேர்தல் என்பது புதிதல்ல. கடந்த காலங்களில் தேர்தல்களை நாம் நேர்மையாகவும், நியாயமான முறையிலும் சந்தித்து மக்களின் ஏகோபித்த பேராதரவை பெற்று மக்கள் பணியாற்றி இருக்கிறோம்.

கடந்த 10 ஆண்டுகளில் ஜெயலலிதா அறிவித்த அனைத்து மக்கள் நலன் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகளை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி இருக்கிறது. உள்ளாட்சியில் ஒரு நல்லாட்சி அ.தி.மு.க. அரசால் மட்டுமே தர முடியும். இந்த தேர்தலிலும் அதே பழைய பாணியையே தி.மு.க. கையாண்டு, பொய்யை சொல்லி கடந்த 4 மாதத்தில் மக்களிடத்தில் முழுமையாக தன்னுடைய செல்வாக்கை இழந்த தி.மு.க., உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றுவதற்கு அரசு எந்திரத்தையும், அரசு அதிகாரிகளையும் தன்னுடைய கைப்பாவைகளாக மாற்றி வெற்றிபெற முயலும்.

தி.மு.க.வினரின் தில்லுமுல்லு

எனவே, அ.தி.மு.க.வினர் மற்ற தேர்தலை போல இந்த தேர்தலை எண்ணாமல் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். நம் முகவர்கள் வாக்குப்பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் காலை 7 மணி முதலே வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க செய்ய வேண்டும். வாக்குப்பதிவு நிறைவுபெற்று அதனை ‘சீலிட்டு’ வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசென்று சேர்க்கும் வரையிலும் மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் இருந்திடல் வேண்டும்.

தி.மு.க.வினர் தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் கைதேர்ந்தவர்கள் என்பதை இந்த நாடே நன்கு அறியும். ஆகவே, வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க.வினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா? என்பதை விழிப்போடு கண்காணித்து, ஏதேனும் தவறுகள் நடக்கும்பட்சத்தில் அது சம்பந்தமாக மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வு காண வேண்டும்.

விழிப்புணர்வுடன் பணியாற்றுங்கள்

அ.தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அங்கிருந்து வெளியில் வர வேண்டும். கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள முதன்மை ஏஜென்டுகளும், தங்களுக்கான வாக்கு எண்ணும் மையங்களில், வாக்கு எண்ணும் பணி முறையாக நடைபெறுகின்றதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் விழிப்புடன் இருந்து பணியாற்றுங்கள். இது, ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story