கலை-அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம் உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகள்


கலை-அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம் உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 4 Oct 2021 10:33 PM GMT (Updated: 4 Oct 2021 10:33 PM GMT)

கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கிய நிலையில், மாணவ-மாணவிகள் உற்சாகமாக கல்லூரிக்கு வந்திருந்தனர். கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து மூடப்பட்டு இருந்த கல்லூரிகள் கடந்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன. நோய்த் தொற்றுக்கு மத்தியில் கல்லூரிகள் திறக்கப்பட்டு இருப்பதால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டு இருந்தது.

அந்தவகையில், வாரத்தில் 6 நாட்களுக்கு வகுப்புகள் என்று சுழற்சி முறையில் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைப் பொறுத்தவரையில், இளங்கலை 2-ம் ஆண்டு ஆண்டு மாணவர்கள் ஒருநாளும், 3-ம் ஆண்டு மாணவர்கள் மறுநாளும் என சுழற்சி முறையில் வகுப்புகளுக்கு வர அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். இதுதவிர முதுகலை 2-ம் ஆண்டு மாணவர்கள் அனைத்து நாட்களும் வர கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

இந்தநிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை என்பது கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்காக கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்துகொள்ள அரசும் உத்தரவு பிறப்பித்து, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

அதன்படி, 2021-22-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பெரும்பாலான கல்லூரிகளில் முடிந்தநிலையில், இந்த கல்லூரிகளில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு எப்போது வகுப்புகள் தொடங்கப்படும் என்று மாணவ-மாணவிகள், பெற்றோர் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில், 4-ந் தேதி (நேற்று) முதல் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெறும் என்ற அறிவிப்பை கல்லூரிக்கல்வி இயக்குனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்.

வகுப்பறைக்கு 20 மாணவர்கள்

அந்த அறிவிப்பின்படி, தமிழகம் முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கின. மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் கல்லூரிகளுக்கு வந்திருந்தனர். ஒரு வகுப்புக்கு 20 மாணவர்கள் வீதம் அமரும்வண்ணம், வகுப்பறைகளில் ஏற்பாடு செய்து, அதற்கேற்றாற்போல் மாணவ-மாணவிகளை கல்லூரி நிர்வாகம் வரவழைத்து இருந்தது.

அதாவது தொலைதூரத்தில் இருந்து படிக்க வருபவர்கள், விடுதியில் தங்கி படிப்பவர்களை ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளவும், மற்ற மாணவர்களை 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள் வராத நாட்களில் அவர்கள் பயன்படுத்தும் வகுப்பறையை பயன்படுத்திக்கொள்வதற்கு ஏற்றவாறும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.

ரோஜாப்பூ கொடுத்து வரவேற்பு

முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்பட அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவ-மாணவிகள் வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவ-மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கினாலும், முதலில் பாடத்திட்டங்களை கொண்டு வகுப்புகளை எடுக்காமல், புத்துணர்ச்சிக்கான பாடங்களை எடுக்க கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவுறுத்தி இருக்கும் நிலையில், அதன்படி, நேற்று கல்லூரிகளில் வகுப்புகள் நடத்தப்பட்டன. சில கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளை 2 அல்லது 3-ம் ஆண்டு மாணவ-மாணவிகள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றதையும் பார்க்க முடிந்தது.

ஜாலியாக இருக்கிறது

கல்லூரிக்கு வந்திருந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் பாலாஜி, அனிதா, சுஜாதா ராணி கூறுகையில், ‘பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளில் ஆன்லைன் மூலமாகவே படிப்புகளை கற்று தேர்ச்சி பெற்று வந்திருக்கிறோம். இப்போது கல்லூரி முதலாம் ஆண்டில் நேரடி வகுப்புகளில் கலந்துகொள்வது ஜாலியாக இருக்கிறது. புது நண்பர்களை சந்தித்தது மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. ஆன்லைன் படிப்பைவிட, நேரடி வகுப்புகள்தான் சிறந்தது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகளில் கலந்துகொள்ள கல்லூரி நிர்வாகமும், பெற்றோரும் அறிவுறுத்தி இருக்கின்றனர். அதை கண்டிப்பாக பின்பற்றுவோம்’ என்றனர்.

Next Story