9 மாவட்டங்களில் 16 பேர் உயிரிழப்பு: 1,467 பேருக்கு கொரோனா அதிகபட்சமாக சென்னையில் 4 பேர் பலி


9 மாவட்டங்களில் 16 பேர் உயிரிழப்பு: 1,467 பேருக்கு கொரோனா அதிகபட்சமாக சென்னையில் 4 பேர் பலி
x
தினத்தந்தி 4 Oct 2021 11:27 PM GMT (Updated: 4 Oct 2021 11:27 PM GMT)

தமிழகத்தில் நேற்று 1,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 9 மாவட்டங்களில் 16 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய (திங்கட்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரத்து 229 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 883 ஆண்கள், 584 பெண்கள் என மொத்தம் 1,467 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 181 பேரும், கோவையில் 155 பேரும், செங்கல்பட்டில் 103 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 5 பேரும், தென்காசியில் 2 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் 12 வயதுக்குட்பட்ட 94 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 201 முதியவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

16 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 66 லட்சத்து 87 ஆயிரத்து 871 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 15 லட்சத்து 58 ஆயிரத்து 407 ஆண்களும், 11 லட்சத்து 11 ஆயிரத்து 517 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேர் உள்பட 26 லட்சத்து 69 ஆயிரத்து 962 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 38 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 85 ஆயிரத்து 683 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 10 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 6 பேரும் என 16 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 4 பேரும், தஞ்சாவூரில் 3 பேரும், மதுரை, திருவள்ளூரில் தலா இருவரும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருவாரூர், தூத்துக்குடியில் தலா ஒருவரும் என 9 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 35 ஆயிரத்து 666 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

1,559 பேர் ‘டிஸ்சார்ஜ்’

தமிழகத்தில் நேற்று 40 ஆயிரத்து 999 ஆக்சிஜன் படுக்கைகள், 25 ஆயிரத்து 447 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 8 ஆயிரத்து 223 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 74 ஆயிரத்து 669 படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 1,559 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 195 பேரும், சென்னையில் 189 பேரும், ஈரோட்டில் 105 பேரும் அடங்குவர். இதுவரையில் 26 லட்சத்து 17 ஆயிரத்து 432 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 16 ஆயிரத்து 864 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story