பா.ஜ.க.வினர் போராட்டத்துக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் அமைச்சர் சேகர்பாபு பேட்டி


பா.ஜ.க.வினர் போராட்டத்துக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
x
தினத்தந்தி 5 Oct 2021 8:04 PM GMT (Updated: 5 Oct 2021 8:04 PM GMT)

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படியே வார இறுதியில் கோவில்கள் மூடப்பட்டுள்ளதாகவும், பா.ஜ.க.வின் போராட்டத்துக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள ராமலிங்க அடிகளார் (வள்ளலார்) வாழ்ந்த இல்லத்தில் அவரது பிறந்த நாளான நேற்று இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வள்ளலாரின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை ஏழுகிணறு பகுதியில் 55 ஆண்டு காலம் வள்ளலார் வாழ்ந்துள்ளார். இதில் இந்த வீட்டில் 33 ஆண்டுகள் இருந்துள்ளார். அவர் அவதரித்த இந்த நாளில் அவர் வாழ்ந்த இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

வள்ளலார் சர்வதேச மையம்

பசி என்பது நாட்டில் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற வள்ளலாரின் அரும்பணிகளை பெருமை படுத்தும் விதமாக 72 ஏக்கர் நிலப்பரப்பில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான வரைபடங்கள் கோரி விளம்பரப்படுத்தி உள்ளோம். விரைவில் இந்த பணிக்கு டெண்டர் கோரப்பட்டு வள்ளலார் சர்வதே மையம் வெகு விரைவில் கட்டப்படும். மேலும், சென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை புனரமைக்கவும் அரசு உதவி செய்யும்.

தமிழக முதல்-அமைச்சர் அதிவேகமாக மக்கள் நலப்பணிகளை செய்வதால் அவரை ‘டேஞ்சரஸ்’ என எச்.ராஜா கூறியிருக்கலாம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுயமாக சிந்தித்து, சுயமாக முடிவெடுப்பதால்தான் நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். சுயமாக சிந்திப்பதால்தான் மக்கள் அவரை ஏற்றுக்கொண்டு முதல்-அமைச்சராக தேர்வு செய்துள்ளனர். முதல்-அமைச்சர் சிந்தனை சரியில்லை என்று கூறியவரின் சிந்தனை சரியில்லாத காரணத்தால் தான் அவரது கட்சியிலே அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

காழ்ப்புணர்ச்சி

அன்னை தமிழில் வழிபாடு திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. போராடுவதற்கு எந்த காரணமும் இல்லை என்பதாலும், தமிழக அரசின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவும்தான் பா.ஜ.க. தற்போது போராட்டம் நடத்துகின்றது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படியே கோவில்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றது. வார இறுதி நாட்களிலும் கோவில்களை திறக்கக்கோரி பா.ஜ.க. போராட்டம் நடத்துவது தேவையற்றது. இந்த நிலை ஆண்டு முழுவதும் தொடராது. கொரோனா வைரசால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற நிலை வந்தவுடன் கோவில்கள் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story