வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா வேட்பாளரின் கணவர் கைது


வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா வேட்பாளரின் கணவர் கைது
x
தினத்தந்தி 5 Oct 2021 10:07 PM GMT (Updated: 5 Oct 2021 10:07 PM GMT)

நாங்குநேரி அருகே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக பெண் வேட்பாளரின் கணவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நாங்குநேரி அருகே உள்ள தெய்வநாயகபேரியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தேர்தல் பறக்கும் படையினர் தெய்வநாயகபேரி கிராமத்திற்கு விரைந்து சென்றனர்.

வேட்பாளரின் கணவர் கைது

அப்போது, அங்கு தெருவில் நின்று ஒருவர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டு இருந்தார். அவரை பறக்கும் படையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் அரியகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும் போட்டியிடும் பிரேமா என்பவரின் கணவர் அருமைதுரை (வயது 54) என்பதும், ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி தனது மனைவி பிரேமாவுக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.40 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நாங்குநேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, அருமைதுரையை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் நாங்குநேரி உதவி தேர்தல் அலுவலர் கிஷோர்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ரூ.1¼ லட்சம் பறிமுதல்

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியம் 6-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த விநாயகம் (வயது 50) மற்றும் அவருடன் சிலர் சேர்ந்து நேற்றுமுன்தினம் இரவு ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனைக்கண்ட பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கையும், களவுமாக பிடித்து அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story