உருக்கமான வீடியோ வெளியிட்டுவிட்டு தி.மு.க. நிர்வாகி தற்கொலை


உருக்கமான வீடியோ வெளியிட்டுவிட்டு தி.மு.க. நிர்வாகி தற்கொலை
x
தினத்தந்தி 5 Oct 2021 11:55 PM GMT (Updated: 5 Oct 2021 11:55 PM GMT)

சென்னை ராயப்பேட்டையில் தி.மு.க. நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு மனைவியும், அவரது குடும்பத்தினருமே காரணம் என உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னை,

சென்னை ராயப்பேட்டை முகமது உசேன் சந்து பகுதியை சேர்ந்தவர் வித்தியகுமார் (வயது 27). இவர் ஜாம்பஜார் பகுதியில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கான அலங்கார கடை மற்றும் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வந்தார். இவருக்கும், நிஷா என்பவருக்கும் கடந்த 8 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு மனைவி மற்றும் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் வித்தியகுமாரையும், நிஷாவையும் பார்ப்பதற்கு நிஷாவின் சகோதரி உஷாவும், அவரது கணவர் கண்ணனும் அடிக்கடி வித்தியகுமாரின் வீட்டிற்கு வந்துள்ளனர். ஒருகட்டத்தில் நிஷாவின் சகோதரி உஷா தனது கணவருடன் வித்தியகுமாரின் வீட்டிலே நிரந்தரமாக தங்கியதாக கூறப்படுகிறது

கணவன்-மனைவி தகராறு

இதனால் வித்தியகுமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் வித்தியகுமாரை நிஷாவும், அவரது சகோதரி உஷாவும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

தனது கணவர் குடித்துவிட்டு வந்து தன்னை அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாக வித்தியகுமார் மீது நிஷா திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி மகளிர் போலீசார், வித்தியகுமாரையும், அவரது தந்தையையும் விசாரணைக்கு அழைத்துச்சென்று கண்டித்ததாக கூறப்படுகிறது.

உருக்கமான வீடியோ

இதனால் வித்தியகுமார் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்தநிலையில், வித்தியகுமார் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த ஜாம்பஜார் போலீசார் வித்தியகுமாரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் வித்தியகுமார் தற்கொலைக்கு முன்பு செல்போனில் பேசி வீடியோ ஒன்றை பதிவு செய்து, அதனை தனது உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார். அந்த வீடியோ பதிவில், தனது தற்கொலைக்கு தனது மனைவியும், அவரது குடும்பத்தினருமே காரணம் எனவும், தனது பெற்றோரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறும் உருக்கமாக பேசியிருந்தார்.

தி.மு.க. நிர்வாகி

இதையடுத்து போலீசார் அந்த வீடியோவின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட வித்தியகுமார் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story