ஆட்கொல்லி புலியை பிடிக்க அறிவியல் ரீதியாக நடவடிக்கை- தமிழக வனத்துறை


ஆட்கொல்லி புலியை பிடிக்க அறிவியல் ரீதியாக நடவடிக்கை- தமிழக வனத்துறை
x
தினத்தந்தி 6 Oct 2021 5:46 AM GMT (Updated: 6 Oct 2021 5:46 AM GMT)

சிங்காரா வனப்பகுதியில் பதுங்கி உள்ள புலியை பிடிக்க மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து தமிழ்நாடு தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் விளக்கம் அளித்துள்ளார்.

நீலகிரி: 

நீலகிரி  மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர் சோலை அருகே தேவன் - 1 பகுதி முதுமலை, ஸ்ரீமதுரை ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட மாடுகளையும், 4 மனிதர்களையும் புலி அடித்துக் கொன்றது. இதைத்தொடர்ந்து இந்தப் புலியைப் பிடிக்கும் பணி 10ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் புலி எங்கு பதுங்கி உள்ளது எனத் தெரியவில்லை.

இந்நிலையில், நேற்று   சிங்காரா வனப்பகுதியில் எருமை ஒன்றைப் ஆட்கொல்லி புலி தாக்கி கொன்றது. மேலும், உள்ளூர் வாகன ஓட்டுநர் ஒருவர், அந்தப் புலியை சிங்காரா மின்நிலையம் அருகே பார்த்ததாகக் கூறினார். அவர் அளித்த அடையாளங்கள் மூலம், அது தேடப்பட்டு வரும் புலிதான் என்று முடிவு செய்த வனத்துறையினர், சிங்காரா பகுதிக்கு விரைந்தனர்.

மசினகுடி - சிங்காரா வனப்பகுதி சாலையில் புலி நடமாட்டம் தென்பட்டதைத் தொடர்ந்து, சிங்காரா சாலையில் வேட்டைத் தடுப்புப் பிரிவினர் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்களில் ஏறி அமர்ந்து புலியின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

சென்னை ஐகோர்ட்டு புலியைச் சுட்டுக்கொல்ல வேண்டாம் என உத்தரவிட்ட நிலையில், மயக்க ஊசி செலுத்திப் புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

12 வது நாளாக இன்றும் புலியை பிடிக்கும் வேட்டை தொடருகிறது.

சிங்காரா வனப்பகுதியில் பதுங்கி உள்ள புலியை பிடிக்க மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து தமிழ்நாடு தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் விளக்கம் அளித்துள்ளார். 

அப்போது அவர் கூறியதாவது:-

புலியை பிடிக்க தினந்தோறும் வியூகங்களை மாற்றி செயல்பட்டு வருகிறோம். பல்வேறு குழு அமைத்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். டி23 புலிக்கு வயது ஆகிவிட்டதால் காட்டில் உள்ள விலங்குகளை அதனால் வேட்டையாட முடியவில்லை. புலியை பிடிக்க அறிவியல் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

Next Story