முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி


முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 6 Oct 2021 10:14 AM GMT (Updated: 6 Oct 2021 10:14 AM GMT)

முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஸ்ரீவில்லிப்புத்தூர்,
 
சாத்தூரில் கடந்த மாதம் 24 ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பது தொடர்பாக  அ.தி.மு.க.வினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, இராமகிருஷ்ணாபுரம் கிளைச் செயலாளர் வீரா ரெட்டி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி உட்பட 5 பேர் மீது சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேர், இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என,  ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.விசாரணையில் கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால்  முன்ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி, அமைச்சரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவு பிறப்பித்தார்.


Next Story