விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு வெறிச்செயலில் ஈடுபட்டவர் கைது


விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு வெறிச்செயலில் ஈடுபட்டவர் கைது
x
தினத்தந்தி 6 Oct 2021 7:22 PM GMT (Updated: 6 Oct 2021 7:22 PM GMT)

விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் அனிச்சகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன் என்ற மலைராஜ் (வயது50). இவருக்கும், இதே ஊரைச் சேர்ந்த துரைராஜ் (60) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதில் அனிச்சகுடி காளியம்மன் கோவில் பூசாரியான துரைராஜ், நேற்று கோவிலில் தீபாராதனை காண்பித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மலைராஜ் தீபாராதனை தட்டை காலால் தட்டிவிட்டு அவதூறாக பேசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

அரிவாள் வெட்டு

இதுகுறித்து கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்களில் ஒருவர் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

உடனே ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வம், ஏட்டு கர்ணன் ஆகியோர் மலைராஜ் வீட்டிற்கு சென்று விசாரணை செய்த போது, அவர் திடீரென அரிவாளை எடுத்து வந்து சப்-இன்ஸ்பெக்டர் தலையில் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த தமிழ்ச்செல்வம் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து மலைராஜை கைது செய்தனர்.

Next Story