தடுப்பூசி பணியில் தீவிரம் காட்டியதால்தான் கொரோனா அச்சமின்றி வெளியே தைரியமாக நடமாட முடிகிறது


தடுப்பூசி பணியில் தீவிரம் காட்டியதால்தான் கொரோனா அச்சமின்றி வெளியே தைரியமாக நடமாட முடிகிறது
x
தினத்தந்தி 7 Oct 2021 10:59 PM GMT (Updated: 7 Oct 2021 10:59 PM GMT)

கொரோனா தடுப்பூசி பணியில் அரசு தீவிரம் காட்டியதால்தான் தைரியமாக வெளியே நடமாட முடிகிறது என்று மு.க.ஸ்டாலினை மக்கள் பாராட்டினர்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடுமையான பணிச்சுமைக்கு மத்தியிலும் உடல்நலனில் தனி கவனம் செலுத்தி வருகிறார். அதிகாலை வேளையில் சைக்கிளிங் செல்வது, நடைபயிற்சி செய்வது என்று உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அவர், சென்னை அடையார் தியாசபிகல் பூங்காவில் மக்களோடு மக்களாக தினமும் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது மு.க.ஸ்டாலின் மக்களுடன் சகஜமாக உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதே போன்று மு.க.ஸ்டாலினுடைய செயல்பாடுகளுக்கு மக்கள் நேரடியாக பாராட்டுக் களை தெரிவித்து வருகின்றனர்.

பாராட்டு

அந்தவகையில் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிரே வந்த ஒருவர் ‘ நீங்கள் கொரோனா தடுப்பூசியை 5 கோடி மக்களுக்கு விரைவில் போட்டுள்ளீர்கள். இதனால்தான் தைரியமாக வெளியே நடமாட முடிகிறது. நிர்வாகத்திலும் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வந்துள்ளீர்கள். இதனை அப்படியே கடைபிடித்து லஞ்சத்தை கட்டுப்படுத்தினால் தமிழ்நாடு இந்தியாவில் மட்டும் அல்ல வெளியேயும் முதல் இடத்துக்கு கொண்டு வருவதை யாராலும் தடுக்க முடியாது. உங்களுடைய உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்.

அவருடைய பேச்சை மு.க.ஸ்டாலின் பவ்யமாக கேட்டுக் கொண்டு வணங்கியபடி நடைபயிற்சியை தொடர்ந்தார்.

மக்கள் மகிழ்ச்சி

வழியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்மணி ஒருவர், ‘உங்களை நினைத்தால் எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. இதே மாதிரி எப்பவும் இருங்கள். உங்கள் சேவை நல்லபடியாக இருக்கிறது.’ என்று மனதார பாராட்டினார். அதற்கு மு.க.ஸ்டாலின் சிரித்தபடி கட்டாயம் என்று கூறினார்.

இதே போன்று நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் மு.க.ஸ்டாலினிடம், உங்களுடைய ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். அதற்கு நன்றி என்று சிரித்த முகத்துடன் கூறியபடி நடைபயிற்சியை தொடர்ந்தார்.

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் என்ற உயர்ந்த பதவியில் இருந்தாலும் தங்களுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டு சகஜமாக பேசி வருவதை நினைத்து மக்கள் மனம் மகிழ்கின்றனர்.

Next Story