சென்னை தம்பதி வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை


சென்னை தம்பதி வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 9 Oct 2021 8:35 PM GMT (Updated: 9 Oct 2021 8:35 PM GMT)

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ரூ.21 ஆயிரம் கோடி ஹெராயின் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான சென்னை தம்பதி வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

3 ஆயிரம் கிலோ ஹெராயின்
ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக குஜராத் முந்த்ரா துறைமுகத்துக்கு கடந்த மாதம் வந்த சரக்கு கப்பலில் மத்திய வருவாய் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் 2 கன்டெய்னர் பார்சல்களில் முகபவுடர் என்ற போர்வையில் 3 ஆயிரம் கிலோ போதைப் பொருள் கடத்தி வரப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.தடயவியல் பரிசோதனையில், இது ஹெராயின் போதை பொருள் என்பதும், இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.21 ஆயிரம் கோடி என்பதும் தெரிய வந்தது. இந்த வழக்கில் 2 ஆப்கானிஸ்தானியர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். பின்னர் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இயங்கும் நிறுவனத்தின் பெயரில் இந்த பார்சல் வந்திருப்பதும், இந்த நிறுவனத்தை நடத்தி வருவது சென்னை போரூர் கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதியர் சுதாகர், வைசாலி ஆகியோர் என்பதும் தெரிய வந்தது.

தேசிய புலனாய்வு விசாரணை
இதையடுத்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சென்னையில் உள்ள அவர்களது வீட்டுக்கு சென்று சோதனை நடத்தி 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் குஜராத் அழைத்து சென்று அங்குள்ள சிறையில் அடைத்தனர்.ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெராயின் கடத்தி வரப்பட்டுள்ளதால் இதன் பின்னணியில் பயங்கரவாதிகள் தொடர்பு இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த 6-ந்தேதி கையில் எடுத்தனர்.இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தேசிய புலனாய்வு முகமை குழுவினரிடம் ஒப்படைத்தனர். இந்தநிலையில் கேரள மாநிலம் பதிவெண் கொண்ட கார்களில் 10 அதிகாரிகள் அடங்கிய தேசிய புலனாய்வு முகமை குழுவினர் நேற்று சென்னை வந்தனர்.

அதிரடி சோதனை
அவர்கள், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய தம்பதியர் சுதாகர், வைஷாலி வசித்த கொளப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கையில் சில பேப்பர் ஆவணங்களும், தொழில்நுட்ப ஆவணங்களும் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெராயின் கடத்தல் வழக்கில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தொடர்பு இருக்கிறதா? பயங்கரவாதிகள் தொடர்பு இருக்கிறதா? என்பது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை முடிவில் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story