முந்திரி தொழிலாளி கொலை : கடலூர் எம்.பி. ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண்


முந்திரி தொழிலாளி கொலை : கடலூர் எம்.பி. ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண்
x
தினத்தந்தி 11 Oct 2021 5:40 AM GMT (Updated: 11 Oct 2021 5:40 AM GMT)

முந்திரி தொழிலாளி கொலை வழக்கில் தொடர்புடைய தி.மு.க. எம்.பி. ரமேசிடம், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர், 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பத்தில் முந்திரி தொழிற்சாலை இயங்கி வருகிறது. கடலூர் எம்.பி. ரமேசுக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில், பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு (வயது 55) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந்தேதி கோவிந்தராசு, மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல், தனது தந்தையை ரமேஷ் எம்.பி. மற்றும் முந்திரி தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்கள் அடித்துக் கொலை செய்து விட்டதாகவும், இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில் கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த மாதம் 28-ந்தேதி விசாரணையை தொடங்கினர். தீவிர விசாரணை நடந்து வந்த வேளையில், கோவிந்தராசுவின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. 
அதில், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையிலும் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 
இதையடுத்து கோவிந்தராசு சந்தேக மரணம் என பதியப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றி கடலூர் எம்.பி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜ்(31), தொழிலாளர்கள் அல்லா பிச்சை(53), சுந்தர் என்கிற சுந்தர்ராஜ்(31), வினோத்(31), கந்தவேல்(49) ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத், கந்தவேல் ஆகியோரை கைது செய்தனர். அப்போது நடந்த விசாரணையின்போது எம்.பி.யின் உதவியாளர் நடராஜ் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அல்லா பிச்சை உள்ளிட்ட 4 பேர் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தி.மு.க. எம்.பி. ரமேசிடம், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில்  இன்றி கடலூர் எம்.பி. ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளார்.

Next Story