புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த சட்டத்திருத்தம் மத்திய மந்திரிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்


புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த சட்டத்திருத்தம் மத்திய மந்திரிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்
x
தினத்தந்தி 11 Oct 2021 9:25 PM GMT (Updated: 11 Oct 2021 9:25 PM GMT)

புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த சட்டத்திருத்தம் வேண்டும் என்று மத்திய மந்திரி மன்சுக் மாண்டாவியாவுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டாவியாவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

மனிதர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் 6 முதல் 8 முக்கிய நோய்களுக்கும், புற்றுநோய், இதயநோய்கள், நுரையீரல் நோய்கள் உள்ளிட்ட 40 சதவீதம் தொற்றாநோய்களுக்கும் புகையிலை பயன்பாடுதான் முதன்மை காரணமாக திகழ்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

புகையிலை பயன்பாடு காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 13.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

புகையிலை பொருட்களின் உறைகளில் 85 சதவீதம் அளவுக்கு எச்சரிக்கை படங்களை வெளியிட்டதன் மூலம் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், புகையிலை பயன்பாட்டை குறைப்பதற்காகவும் நீங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை.

சட்டத்திருத்தம்

2003-ம் ஆண்டு இயற்றப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (விளம்பரங்களை தடை செய்தல் மற்றும் வர்த்தகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் வினியோகத்தைக் கட்டுப்படுத்துதல்) சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்திருப்பதற்காகவும், உங்களின் இந்த முயற்சிக்கு பொதுமக்களிடம் இருந்து ஆதரவும், பாராட்டும் குவிந்து வருவதற்காக எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (விளம்பரங்களை தடை செய்தல் மற்றும் வர்த்தகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் வினியோகத்தைக் கட்டுப்படுத்துதல்) சட்டத்திருத்த மசோதா 2020-ல் கீழ்க்கண்ட திருத்தங்களை செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

அதாவது, உணவகங்கள், தங்கும் விடுதிகள், விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கென தனி பகுதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதன் மூலம், அந்த இடங்களில் புகைப்பிடிக்க 2003-ம் ஆண்டின் சட்டம் அனுமதிக்கிறது. இந்த பிரிவு அகற்றப்பட வேண்டும்.

சட்டபூர்வ வயதை உயர்த்த வேண்டும்

புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங் களில் அவை குறித்த விளம்பரங்களோ, அப்பொருட்களை பார்வைக்கு வைப்பதோ கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும். 2003-ம் ஆண்டின் புகையிலை பொருட்கள் கட்டுப்பாட்டு சட்டத்தின்படி, கடைகளில் ஒற்றை சிகரெட் விற்பனையும், சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையும் அனுமதிக்கப்படவில்லை. அதனால், அவை இரண்டும் தடை செய்யப்பட வேண்டும்.

புகையிலை பொருட்களை பயன்படுத்துவதற்கான சட்டபூர்வ வயது 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தப்பட வேண்டும்.

எனவே, பொது சுகாதாரத்தின் நலன் கருதி, சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (விளம்பரங்களை தடை செய்தல் மற்றும் வர்த்தகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் வினியோகத்தைக் கட்டுப்படுத்துதல்) சட்டத்திருத்த மசோதா 2020-ஐ வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், நான் முன்வைத்துள்ள திருத்தங்களுடன் தாக்கல் செய்யவேண்டும் என்ற எனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். அதன் மூலம், கோடிக்கணக்கான இளைஞர்களையும், பொதுமக்களையும் கொடிய புகையிலை பொருட்களில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Next Story