ஆயுத பூஜையையொட்டி அரசு, ஆம்னி பஸ்கள் வெளியூர்களுக்கு செல்லும் வழித்தடங்கள்


ஆயுத பூஜையையொட்டி அரசு, ஆம்னி பஸ்கள் வெளியூர்களுக்கு செல்லும் வழித்தடங்கள்
x
தினத்தந்தி 11 Oct 2021 10:58 PM GMT (Updated: 11 Oct 2021 10:58 PM GMT)

ஆயுத பூஜையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அரசு மற்றும் ஆம்னி பஸ்களின் வழித்தட விவரத்தை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.

சென்னை,

ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) சென்னை கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

போக்குவரத்து நெரிசல் இன்றி நிம்மதியாக சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள், ஆம்னி பஸ்கள் செல்லும் வழித்தட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாம்பரம் செல்லாது

* கோயம்பேட்டில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்களும் தாம்பரம் செல்ல 100 அடி சாலையில் செல்லாது. அதற்கு பதிலாக பூந்தமல்லி உயர் சாலை, மதுரவாயல் புறவழிச்சாலை, மதுரவாயல் டோல் பிளாசா வழியாக தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூர் சென்றடையும்.

* வழக்கம் போல் எஸ்.இ.டி.சி. அரசு பஸ்கள் பூந்தமல்லி உயர் சாலை, வானகரம்,நசரத்பேட்டை, வெளி வளைய சாலை வழியாக சென்று வண்டலூரை சென்றடையும். இந்த பஸ்கள் தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூர் வழியாக செல்லாது.

* கோயம்பேட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் பூந்தமல்லி உயர் சாலை, மதுரவாயல் புறவழிச்சாலை, மதுரவாயல் டோல் பிளாசா மற்றும் பெருங்குளத்தூர் வழியாக செல்ல வேண்டும்.

ஆம்னி பஸ்களுக்கு அறிவுறுத்தல்

* கிழக்கு கடற்கரை சாலை நோக்கி ஆம்னி பஸ்கள் 100 அடி சாலை, கத்திப்பாரா, கிண்டி, சர்தார் படேல் சாலை வழியாக அனுமதிக்கப்படும். இந்த பஸ்கள் போலீசாரால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு செல்ல வேண்டும்.

* ஆம்னி பஸ்கள் 100 அடி சாலை, சி.எம்.ஆர்.எல்., ஆலந்தூர் மெட்ரோ, கே.கே.நகர் முன் பூந்தமல்லி உயர் சாலை ஆகியவற்றில் பயணிகள் ஏறுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக அந்த பயணிகளை கோயம்பேடு, தாம்பரம் அல்லது வண்டலூரில் இருந்து ஏறுமாறு ஏற்பாடுகள் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* கோயம்பேட்டில் இருந்து அனைத்து பயணிகளுடன் புறப்படும் ஆம்னி பஸ்கள் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரை தவிர்த்து வண்டலூரை அடைய பி.எச் சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளி வளைய சாலை வழியாக செல்ல வேண்டும். பயணிகள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story