பிரிந்து சென்ற மனைவி, குழந்தைகளை கேட்டதால் விரக்தி: 2 மகன்களை ஏரியில் மூழ்கடித்து கொன்ற தந்தை


பிரிந்து சென்ற மனைவி, குழந்தைகளை கேட்டதால் விரக்தி: 2 மகன்களை ஏரியில் மூழ்கடித்து கொன்ற தந்தை
x
தினத்தந்தி 12 Oct 2021 9:41 PM GMT (Updated: 12 Oct 2021 9:41 PM GMT)

பிரிந்து சென்ற மனைவி, தனது 2 மகன்களையும் தன்னிடம் இருந்து பிரித்து விடுவாளோ? என்ற அச்சத்தில் 2 மகன்களை, ஏரியில் மூழ்கடித்து கொன்ற தந்தை, தானும் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆவடி,

சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 30). இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு ரித்தீஷ் (6) மற்றும் ராக்கேஷ் (4) என 2 மகன்கள் இருந்தனர்.

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மாரியம்மாள், 6 மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த வடமதுரை பகுதியில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கணேசன், தனது 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.

இதற்கிடையில் கணேசன், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் ஒரு வருடமாக வேலைக்கு செல்ல முடியாமல் 3 மாதமாக சரியாக சாப்பிட முடியாமல் மகன்களுடன் பரிதவித்தார். இதனால் கணேசனின் தந்தை தாஸ் என்பவர் தனது மகனையும், 2 பேரன்களையும் பராமரித்து வந்தார்.

மகன்களை கொன்றார்

இந்தநிலையில் தனது குழந்தைகளை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி மாரியம்மாள் கேட்டார். இதுதொடர்பாக ஆவடி அனைத்து மகளிர் போலீசில் அவர் புகார் கொடுத்தார். இதையறிந்த கணேசன், தனது 2 மகன்களையும் தன்னிடம் இருந்து மனைவி பிரித்து விடுவாளோ? என விரக்தி அடைந்தார்.

மகன்களை பிரிய மனமின்றி பரிதவித்த கணேசன், தனது மகன்களை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு கணேசன், தனது 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு ஆவடியை அடுத்த வெள்ளானூர் ஏரிக்கு சென்றார்.

அங்கு தனது 2 மகன்களையும் ஏரி தண்ணீரில் அமுக்கி மூழ்கடித்தார். இதில் மூச்சுத்திணறிய ரித்தீஷ், ராக்கேஷ் இருவரும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

தற்கொலை முயற்சி

பின்னர் கரைக்கு வந்த கணேசன், அங்கு கிடந்த பாட்டிலை உடைத்து தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் ரத்தம் சொட்டிய நிலையில் ஏரிக்கு செல்லும் பாதையின் அருகே உள்ள புதரில் மயங்கி விழுந்தார்.

இதற்கிடையில் நேற்று காலை ஏரியில் 2 குழந்தைகள் பிணமாக மிதப்பதாக அந்த பகுதி பொதுமக்கள், ஆவடி டேங்க் பேக்டரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆவடி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் 2 உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது புதரில் கையை அறுத்த நிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்த கணேசனையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உருக்கமான கடிதம்

இதற்கிடையில் கணேசன், தனது வீட்டில் உருக்கமாக எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர், “என்னை விட்டு பிரிந்து சென்ற மனைவி, 2 மகன்களையும் என்னிடம் இருந்து பிரித்துவிடுவாளோ? என்ற அச்சத்தில் எனது மகன்களை கொன்றுவிட்டு, நானும் தற்கொலை செய்து கொள்கிறேன். எங்களது சாவுக்கு, என்னையும், எனது மகன்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய எனது மனைவிதான் காரணம்” என அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரிந்து சென்ற மனைவி, தனது 2 மகன்களை தன்னிடம் இருந்து பிரித்து விடுவாளோ? என்ற அச்சத்தில், மகன்களை கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story