திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் ரூ.1,200 கோடி முதலீட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா


திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் ரூ.1,200 கோடி முதலீட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா
x
தினத்தந்தி 13 Oct 2021 12:15 AM GMT (Updated: 13 Oct 2021 12:15 AM GMT)

திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் ரூ.1,200 கோடி முதலீட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

சென்னை,

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், நேஷனல் ஹைவே லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை நிறுவனம் மற்றும் சென்னை துறைமுகம் ஆகியவை இணைந்து, பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், திருவள்ளூர் மாவட்டம், மப்பேட்டில் ரூ.1,200 கோடி முதலீட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

காணொலி காட்சி மூலம் நடந்த நிகழ்சியில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் டெல்லியில் இருந்த மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை மந்திரி சர்பானந்த சோனோவால் மற்றும் மத்திய சாலை போக்குவரத்து இணை மந்திரி ஜென்ரல் வி.கே.சிங் ஆகியோர் முன்னிலையிலும் கையெழுத்தானது.

முக்கிய தொழில் பகுதி

இந்நிகழ்வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழக தொழில் துறை வரலாற்றில் இது ஒரு முக்கியமான நாள் ஆகும். தமிழ்நாடு அரசுடன் இணைந்து பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவை மத்திய அரசு தமிழ்நாட்டில் தொடங்குவது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டில் அமையும் முதலாவது பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவாக இது அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 158 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,200 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. இந்த பூங்கா அமையும் பகுதி மிக மிக முக்கியமான தொழில் பகுதியாக இருக்கிறது.

பூங்காவில் வசதிகள்

பெரிய தொழிற்சாலைகள் திரளாக அமைந்துள்ள திருபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம் மற்றும் ஒரகடம் ஆகிய பகுதிகளுக்கு மிக அருகில் இப்பூங்கா அமையப்போகிறது. இந்த பூங்கா, சென்னை எல்லை சுற்றுவட்டச்சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

சென்னை விமான நிலையம், சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகம் ஆகியவற்றை சிறப்பான முறையில் இது இணைக்க வழிவகை செய்கிறது. அனைத்து வசதிகளும் கொண்ட இடத்தில் அமைய இருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த வசதிகளும் இதில் உள்ளன.

ரெயில் மற்றும் சாலை இணைப்புகளுடன் சரக்கு முனையம், சேமிப்பு கிடங்கு, குளிர்பதன சேமிப்பு கிடங்கு, எந்திரங்கள் மூலம் சரக்குகளைக் கையாளுதல், மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளான சுங்க அனுமதி பெறுதல், சோதனை வசதிகள் போன்ற உலகத்தரம் வாய்ந்த வசதிகள் அனைத்தும் இப்பூங்காவில் அமைக்கப்பட இருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.

புதிய வேலைவாய்ப்புகள்

இதன் மூலம், சரக்கு போக்குவரத்து செலவு கணிசமான அளவில் குறையும் என்பது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். சரக்கு போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை நாங்கள் செய்ய தொடங்கி இருக்கிறோம். சரக்கு போக்குவரத்து செலவை குறைக்கும் வகையில், தமிழ்நாடு மாநில சரக்கு போக்குவரத்திற்கான திட்டத்தை தயாரிக்கும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.

இதற்கென, டிட்கோ சார்பில் ஒரு ஆலோசகரை நியமித்துள்ளது. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா திட்டத்தை மத்திய அரசு, தமிழ்நாடு அரசின் துணையுடனும் பொது மற்றும் தனியாருடன் இணைந்தும் தொடங்குவதை நன்றியுடன் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

இந்த புதுமையான முயற்சியின் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

கோரிக்கைகள்

தமிழ்நாட்டில் சரக்கு போக்குவரத்து துறைக்கு உதவ வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன்.

* தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்டு வரும் பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை, திருபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் முடிவடையுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்தை துரிதப்படுத்தவும், போக்குவரத்து செலவைக் குறைக்கவும், இந்த விரைவுச் சாலையை, சென்னை சர்வதேச விமான நிலையம் வரை நீட்டிக்க வேண்டும்.

* கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடியில் இதுபோன்ற பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும். இதற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பைத் தரும்.

* தற்போது அமைய உள்ள பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவில், ரெயில்வே துறையின் பங்களிப்பையும் பெற்றுத்தர வேண்டும். இவற்றை விரைந்து வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

பங்கேற்பு

இந்நிகழ்வில் தமிழக தொழில்துறை அமைச்சர்தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தொழில்துறை முதன்மைச் செயலாளர் என்.முருகானந்தம், சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சல், டிட்கோ செயல் இயக்குநர் வந்தனா கார்க், நேஷனல் ஹைவே லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பிரகாஷ் கவுர், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சென்னை மண்டல அலுவலர் எஸ்.பி.சோமசேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story