நீட் தேர்வு: ஒடிசா முதல்-மந்திரியை சந்தித்த கனிமொழி எம்பி


நீட் தேர்வு: ஒடிசா முதல்-மந்திரியை சந்தித்த கனிமொழி எம்பி
x
தினத்தந்தி 13 Oct 2021 1:09 PM GMT (Updated: 13 Oct 2021 1:09 PM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 12 மாநிலங்களை நீட் தேர்வுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் வகையில் ஆதரவு திரட்டி வருகின்றார்.

சென்னை,

மருத்துவ படிப்பில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் தேர்வு திமுக ஆட்சிக்கு வந்த பின் ரத்து செய்யப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் கட்ட நடவடிக்கையாக திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வின் பாதிப்பை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சட்டமன்றத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

அதோடு நின்று விடாமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜக ஆட்சியில் அல்லாத 12 மாநிலங்களை நீட் தேர்வுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் வகையில் ஆதரவு திரட்டி வருகின்றார்.

  அந்த வகையில் இன்று புதன்கிழமை, திமுக மாநில மகளிரணிச் செயலாளரும், திமுகவின் நாடாளுமன்றக் குழு துணைத் தலைவருமான கனிமொழி  எம்பி  ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து மொழி பெயர்க்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையையும் மற்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எழுதிய கடிதத்தையும் வழங்கினார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மாணவர்களின் உயிரையும், கனவுகளையும் பறிக்கும்,  நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தையும், நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளையும் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன்பட்நாயக் அவர்களிடம் வழங்கினேன் என பதிவிட்டுள்ளார்.

Next Story