பனித்திட்டில் மீன்பிடி துறைமுகம் ரங்கசாமி ஆய்வு
பனித்திட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்க முதல் அமைச்சர் ரங்கசாமி ஆய்வு மேற்கொண்டார்.
பாகூர்
பனித்திட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆய்வு மேற்கொண்டார்.
மீன்பிடி துறைமுகம்
புதுச்சேரி மாநிலம் நல்லவாடு, பூ.புதுக்குப்பம், நரம்பை, மூர்த்திகுப்பம் புதுக்குப்பம் ஆகிய 5 கிராம மீனவர்கள் தங்கள் பகுதியில் ஒரு மீன்பிடி துறைமுகம் அமைக்கவேண்டும் என நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக, கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது, பனித்திட்டு கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, மத்திய அரசின் அனுமதிக்காக கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின்னர், அந்த திட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
ரங்கசாமி ஆய்வு
இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. அரசிடம் மீனவர்கள் மீண்டும் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் அதிகாரிகளுடன் நல்லவாடு கிராமத்துக்கு சென்று, முகத்துவாரம் பகுதியை ஆய்வு செய்தனர். பிறகு பனித்திட்டு பகுதியில் உள்ள முகத்துவார பகுதியையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
இது குறித்து அமைச்சர் லட்சுமி நாராயணன் நிருபர் களிடம் கூறியதாவது:-
பனித்திட்டு மற்றும் காரைக்கால் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் திட்டம் உள்ளது. முதற்கட்டமாக இயற்கையாக அமைந்துள்ள பனித்திட்டு பகுதியிலுள்ள முகத்துவாரத்தில் மீன்பிடித் துறை முகம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய முடிவெடுக்கப்பட்டது. ஏனென்றால் நல்லவாடு கிராமத்தில் உப்பனாற்றில் நீர் வரத்து சரியாக இல்லாததால் மீன்பிடி துறைமுகம் அமைப்பதில் சிக்கல் உள்ளது. எனவே பனித்திட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இங்கு பெங்களூருவில் உள்ள வல்லுனர்கள் குழு வந்து ஆய்வு செய்ய உள்ளனர்.
சுற்றுச்சூழல் துறை ஒப்புதல்
இது குறித்து ஏற்கனவே, மத்திய அரசின் அனுமதி கேட்டு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச் சூழல் மற்றும் கடல்சார் மேலாண்மை துறையில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன், மத்திய அரசிடமிருந்து நிதி பெற்று பனித்திட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பனித்திட்டு, நரம்பை, புதுக்குப்பம், நல்லவாடு மற்றும் அருகில் உள்ள மீனவர்கள் பயன்பெறுவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமிகாந்தன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, பல்வேறு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story