உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. பெற்றுள்ள வெற்றி கவுரவமானது டாக்டர் ராமதாஸ் அறிக்கை


உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. பெற்றுள்ள வெற்றி கவுரவமானது டாக்டர் ராமதாஸ் அறிக்கை
x
தினத்தந்தி 13 Oct 2021 7:04 PM GMT (Updated: 13 Oct 2021 7:04 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. பெற்றுள்ள வெற்றி கவுரவமானது, மரியாதைக்குரியது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் 47-க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளை பா.ம.க. கைப்பற்றியிருக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு சுயேச்சை சின்னத்தில் நடைபெற்ற தேர்தலில் பெருமளவில் பா.ம.க.வினர் வெற்றி பெற்றிருக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிட்ட, வெற்றி பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பா.ம.க.வின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன். உள்ளாட்சி தேர்தல்தான் ஜனநாயகத்தின் அடித்தளம். அங்கு வலிமையான ஜனநாயகம் அமைந்தால் கிராமங்களும், மக்களும் முன்னேறுவார்கள் என்பதால், அதற்காக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டது. பா.ம.க.வின் வலிமையையும், தொண்டர்கள் ஆற்றிய களப்பணிகளையும் ஒப்பிடும்போது 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.வுக்கு கிடைத்திருக்கும் வெற்றி போதுமானது அல்ல.

போராடி பெற்ற வெற்றி

ஆனாலும், பா.ம.க. வெற்றி எத்தகைய நெருக்கடிகளுக்கு இடையில் பெறப்பட்டது என்பதுதான் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டை ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் வாக்குகளுக்கு பணத்தை வாரி இறைத்தன. வேட்புமனு தாக்கலில் தொடங்கி, வாக்கு எண்ணிக்கை வரை அனைத்து கட்டங்களிலும் அரசு எந்திரம் ஆளுங்கட்சியின் கட்டளைகளுக்குப் பணிந்தது. பா.ம.க. வென்றிருக்கவேண்டிய பல இடங்களில் முடிவுகள் மாற்றி அறிவிக்கப்பட்டன.

பா.ம.க. இப்போது வெற்றிபெற்ற இடங்கள் பலவற்றிலும்கூட முடிவுகளை மாற்ற முயற்சிகள் நடந்தன. அதை எதிர்த்து மாவட்டத் தேர்தல் அதிகாரி முதல் மாநிலத் தேர்தல் ஆணையர் வரை பல்வேறு நிலைகளிலும் போராடித்தான் முடிவுகளை அறிவிக்கவைக்க முடிந்தது. இவை அனைத்துமே போராடிப் பெற்ற வெற்றிகள்.

3-வது பெரிய கட்சி

அந்த வகையில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், மக்களைச் சந்தித்து அவர்களின் நம்பிக்கையை வென்றெடுத்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. பெற்றுள்ள வெற்றி கவுரவமானது, மரியாதைக்குரியது. பா.ம.க. தனித்து போட்டியிட்டபோதிலும், ஆளும் தி.மு.க., ஆட்சி செய்த அ.தி.மு.க. ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய அரசியல் சக்தி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. பா.ம.க.வை அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்த்திச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், வெற்றியைப் பெற முடியாமல் போனவர்களும் நமக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காகவும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அதன் மூலம் அடுத்து வரும் தேர்தல்களில் பொதுமக்களின் ஒரே தேர்வு பா.ம.க.தான் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story