கோவில் நகைகளை தங்கக்கட்டிகளாக மாற்றும் பணி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


கோவில் நகைகளை தங்கக்கட்டிகளாக மாற்றும் பணி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Oct 2021 7:09 PM GMT (Updated: 13 Oct 2021 7:09 PM GMT)

திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி கோவில்களில் உள்ள பயன்பாடற்ற பொன் நகைகளை 24 காரட் தங்கக்கட்டிகளாக மாற்றுவதற்கான பூர்வாங்க பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள பயன்பாடற்ற பலமாற்று பொன் இனங்களை 24 காரட் தங்கக்கட்டிகளாக மாற்றுவதற்கான பூர்வாங்கப் பணிகளை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறையின் 2021-22-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில், கடந்த 10 ஆண்டுகளாக கோவில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், கோவிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத்தங்கமாக மாற்றி, கோவிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதில் இருந்து வரும் வட்டி மூலமாக கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இப்பணிகளை கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

நேர்த்திக்கடன்

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறியதற்கு நேர்த்திக்கடனாக அளிக்கும் பலமாற்றுப்பொன் இனங்களை இந்து சமய அறநிலைய கொடைகள் சட்ட விதிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளவாறு 1979-ம் ஆண்டு முதல் கற்கள், அரக்கு மற்றும் பிற உலோகங்கள் நீக்கம் செய்யப்பட்டு 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றும் பணி நடைமுறையில் உள்ளது.

கடந்த காலங்களில் பழனி - தண்டாயுதபாணி சுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்பட 9 கோவில்களில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட பலமாற்று பொன் இனங்கள் மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கப்பட்டு 24 காரட் தங்கக்கட்டிகளாக மாற்றப்பட்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 497 கிலோ 795 கிராம் தங்கம், முதலீடு செய்யப்பட்டு வட்டி கோவில்களில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தங்கக்கட்டிகளாக மாற்றம்

அதன்பின்னர், கடந்த 10 ஆண்டு காலமாக கோவிலுக்கு வரும் காணிக்கை பொன் இனங்கள் பெருமளவில் சேர்ந்துள்ளன. இவ்வினங்களில் உபயோகப்படுத்த இயலாத நிலையில், உதிரியாக உள்ள பலமாற்று பொன் இனங்கள் ஒன்றாக சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றால் எவ்வித பயன்பாடும் இல்லாத நிலையில் பாதுகாப்பு கருதி இவற்றை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றுவது அவசியமானது. இப்பணி பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஒரு செயல்பாடு ஆகும்.

எனவே, கோவில் நலன் கருதி, தற்போது கோவில்களின் தேவை போக உள்ள பலமாற்று பொன் இனங்களை உருக்கி 24 காரட் தங்கக்கட்டிகளாக மாற்றி அவற்றை பாதுகாப்பாக வங்கிகளில் முதலீடு செய்யும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன.

வீடியோ பதிவு

சீரியமுறையில் இப்பணிகளை மேற்கொள்ள சென்னை, மதுரை மற்றும் திருச்சி மண்டலங்களுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் முறையே ராஜீ, ஆர்.மாலா மற்றும் ரவிசந்திரபாபு ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு பலமாற்று பொன் இனங்களை கணக்கிடும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இப்பணிகள் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும். இதன் மூலம் கோவிலின் நிதியை பெருக்குவதுடன், பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளுக்கு சிறந்த பாதுகாப்பாகவும் அமையும்.

இந்த முதலீட்டின் மூலம் பெறப்படும் வட்டித்தொகை அந்தந்த கோவில் திருப்பணிகள் மற்றும் இதர வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படும். மேலும், அந்தந்த கோவில்களில் இறைவன், இறைவி உருவங்களுக்கான கவசங்கள் மற்றும் ஆபரணங்கள் செய்வதற்கான தேவை எழுந்தால் வங்கிகளில் முதலீடாக வைக்கப்பட்டுள்ள தங்கக்கட்டிகள் திரும்ப பெறப்பட்டு பயன்படுத்தப்படும்.

கலந்துகொண்டவர்கள்

இந்நிகழ்ச்சியில், தலைமைச்செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஆர்.கண்ணன், காணொலி காட்சி வாயிலாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருச்சி மாவட்ட கலெக்டர் சு.சிவராசு, விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story