ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி: வாக்காளர்களுக்கு கே.எஸ்.அழகிரி நன்றி


ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி: வாக்காளர்களுக்கு கே.எஸ்.அழகிரி நன்றி
x
தினத்தந்தி 13 Oct 2021 9:16 PM GMT (Updated: 13 Oct 2021 9:16 PM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி: வாக்காளர்களுக்கு கே.எஸ்.அழகிரி நன்றி.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. 74 ஊராட்சி ஒன்றியங்களில் 73-லும், 140 மாவட்ட ஊராட்சிகளில் 138-லும் மகத்தான வெற்றி தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்து இருக்கிறது.

அதேபோல, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களில் இக்கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.

கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் நடைபெற்று வருகிற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு நற்சான்றிதழை இத்தேர்தல் வெற்றி மூலம் மக்கள் வழங்கியிருக்கிறார்கள். ஊரக உள்ளாட்சி பொறுப்புகளில் தி.மு.க., தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பாக மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 3-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு படுதோல்வியை மக்கள் வழங்கி இருக்கிறார்கள்.

அதேபோல, சந்தர்ப்பவாத கூட்டணியாக செயல்படுகிற பா.ஜ.க.வுக்கும், பா.ம.க.வுக்கும் மக்கள் பாடம் புகட்டியிருக்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story