வருவாய்த்துறைக்கான 3 வலைதளங்கள் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


வருவாய்த்துறைக்கான 3 வலைதளங்கள் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Oct 2021 9:23 PM GMT (Updated: 13 Oct 2021 9:23 PM GMT)

வருவாய் நிர்வாக ஆணையரக இணையதளம், துணை கலெக்டர்களுக்கான வலைதளம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாவட்ட மாறுதல் வலைதளம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

வருவாய்த்துறையானது மாநிலத்தின் நிர்வாக அமைப்புக்கு முதுகெலும்பாக உள்ளதோடு, சாமானிய மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அரசின் பல்வேறு சமூக பொருளாதார திட்டங்கள் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. மாநில அரசால் அறிவிக்கப்படும் வருவாய் துறையின் சமூக பாதுகாப்பு திட்டங்கள், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டங்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன்படும் சான்றிதழ்கள் வழங்கும் திட்டங்கள் போன்ற திட்டங்கள் வருவாய் நிர்வாக ஆணையரகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் பயன்களை மக்கள் எளிதில் தெரிந்து கொண்டு பயன்அடைவதற்கு ஏதுவாக, வருவாய் நிர்வாக ஆணையரகத்தால், www.cra.tn.gov.in என்ற பிரத்யேக வருவாய் நிர்வாக ஆணையரக இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்தில், இவ்வலுவலகம் சம்பந்தப்பட்ட அரசு திட்டங்களின் விவரங்கள் மற்றும் அரசாணைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் பயன்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

வலைதளம்

தமிழ்நாடு அரசின் குடிமைப்பணியின் கீழ் பணிபுரியும் அலுவலர்களின் நிர்வாக தேவைகளை பூர்த்தி செய்ய துணை கலெக்டர்களுக்கான https://www.cra.tn.gov.in/tnscs என்ற பிரத்யேக வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசு விதிகள் மற்றும் சட்டங்கள், அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் அரசாணைகள், வழிகாட்டு நெறிமுறைகள், சுற்றறிக்கைகள், பணிமாறுதல் மற்றும் பணி நியமனங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள இயலும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கோட்ட / வட்ட அளவிலான பொது மாறுதல்கள் ஆண்டுதோறும் வருவாய் கோட்டாட்சியர் அளவிலும், மாவட்ட அளவிலான மாறுதல்கள் நிர்வாக நலன் கருதி, மாவட்ட கலெக்டர் அளவிலும், மாவட்டங்களுக்கு இடையேயான ஒருவழி மாறுதல்கள் மற்றும் மனமொத்த இருவழி மாறுதல்கள் வருவாய் நிர்வாக ஆணையரால் வழங்கப்பட்டு வருகின்றன.

இம்மாறுதல்கள் தொடர்பான கோரிக்கைகளை பரீசிலித்து, மாறுதல்களை தாமதம் இன்றியும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்தும் வகையில் வருவாய் நிர்வாக ஆணையரகத்தால், https://www.cra.tn.gov.in/vaotransfer என்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி மாறுதல் வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பணி மாறுதல்களை தாமதம் இன்றியும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்த இயலும்.

மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இந்த 3 வலைத்தளங்களையும் தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச்செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமைச்செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் க. பணீந்தர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச்செயலாளர் குமார் ஜெயந்த், இணை ஆணையர் (வருவாய் நிர்வாகம்) சீதாலட்சுமி, தேசிய தகவலியல் மையத்தின் மாநில தகவலியல் அலுவலர் சீனிவாச ராகவன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story