இன்று ஆயுதபூஜை கொண்டாட்டம்: பழங்கள், பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்


இன்று ஆயுதபூஜை கொண்டாட்டம்: பழங்கள், பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 14 Oct 2021 12:06 AM GMT (Updated: 14 Oct 2021 12:06 AM GMT)

ஆயுதபூஜை பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை நேற்று மும்முரமாக நடந்தது.

சென்னை,

ஆயுதபூஜை பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் நேற்று ஆர்வம் காட்டினர்

சென்னையில் பிரதான சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று மக்கள் ஆர்வமுடன் பொரி, அவல், கடலை, வாழைக்கன்று, கரும்பு, பழங்கள் மற்றும் பூஜைக்குரிய பொருட்களை வாங்கி சென்றனர். ஆயுதபூஜை பண்டிகையையொட்டி முக்கியமான பழங்கள் விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் அண்ணா அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்க தலைவர் பழக்கடை கே.ஜெயராமன் கூறியதாவது:-

கடந்த ஆண்டை காட்டிலும்...

ஆயுதபூஜையை முன்னிட்டு வரத்து பாதிக்காத நிலையிலும் பழங்களின் விலை சற்று அதிகரித்து இருக்கிறது. கடந்த வாரம் ரூ.120 வரை விற்பனையான சிம்லா ஆப்பிள் (கிலோவில்) தற்போது ரூ.140 வரையில் விற்பனை ஆகிறது. சாத்துக்குடி, கொய்யா விலை 2 மடங்கு உயந்துள்ளது. சாத்துக்குடி ரூ.60 முதல் ரூ.70 வரையிலும், கொய்யா ரூ.60-க்கும், திராட்சை (கருப்பு) ரூ.80-க்கும், பன்னீர் திராட்சை ரூ.100-க்கும், சீட்லெஸ் திராட்சை ரூ.120-க்கும், மாதுளை ரூ.130 வரையிலும், சீதாப்பழம், சப்போட்டா தலா ரூ.50-க்கும், வாழைத்தார் ரூ.250 முதல் ரூ.500 வரையிலும் விற்பனை ஆகிறது. அரிசி விலையேற்றம் காரணமாக பொரி விலையும் உயர்ந்துள்ளது. 60 படி கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.450-க்கு (ரூ.50 கூடுதலாக) விற்பனை ஆகிறது.

கடந்த ஆண்டை காட்டிலும் மார்க்கெட்டுக்கு 20 சதவீத மக்களே பொருட்கள் வாங்க வந்துள்ளனர். இதனால் எதிர்பார்த்த விற்பனை நடக்காமல் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடைவீதிகளில்...

கோயம்பேடு போல தியாகராயநகர், அண்ணாநகர், அமைந்தகரை, புரசைவாக்கம், பூக்கடை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட கடைவீதிகள் நிறைந்த பகுதிகளிலும் மக்கள் பூஜை பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. அந்தவகையில் கடைவீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

Next Story