முடிச்சூர் ஊராட்சி தலைவராக சுயேச்சையாக போட்டியிட்ட பெண் என்ஜினீயர் வெற்றி


முடிச்சூர் ஊராட்சி தலைவராக சுயேச்சையாக போட்டியிட்ட பெண் என்ஜினீயர் வெற்றி
x
தினத்தந்தி 14 Oct 2021 12:09 AM GMT (Updated: 14 Oct 2021 12:09 AM GMT)

முடிச்சூர் ஊராட்சி தலைவராக சுயேச்சையாக போட்டியிட்ட பெண் என்ஜினீயர் வெற்றி பெற்றார்.

தாம்பரம்,

உள்ளாட்சி தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை ஊராட்சி ஒன்றியம் முடிச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராக சிந்துலேகா என்ற 23 வயது இளம்பெண் போட்டியிட்டார். என்ஜினீயரான இவர், முடிச்சூர் பகுதியில் குடியிருப்போர் நல சங்க கூட்டமைப்பு, மகளிர் சங்கங்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் களம் இறங்கினார்.

இந்தநிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில், முடிச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் சிந்துலேகா, 5195 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரை விட 246 வாக்குகள் அதிகம் பெற்று உள்ளார்.

சுயேச்சைகள் ராஜ்ஜியம்

முடிச்சூர் ஊராட்சியில் இதற்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் 20 ஆண்டுகளாக சுயேச்சை வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் கடும் போட்டிக்கு இடையே சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய பெண் என்ஜினீயர் சிந்துலேகா, ஊராட்சி தலைவராக வெற்றி வாகை சூடி, முடிச்சூரில் சுயேச்சைகள் ராஜ்ஜியம் தொடர்வதை உறுதி செய்து உள்ளார்.

வெற்றி பெற்ற சிந்துலேகா கூறியதாவது:-

சிறந்த ஊராட்சியாக்குவேன்

முடிச்சூரை பொறுத்தவரை சாதி, மத, அரசியல் கட்சியினர் இல்லாமல் எனக்கு முன்பு சுயேச்சையாக வெற்றி பெற்று ஊராட்சி தலைவராக இருந்தவர்கள் மக்கள் சேவை செய்து உள்ளனர். முன்னாள் ஊராட்சி தலைவராக இருந்த நிர்மலா பாஸ்கர், தாமோதரன் ஆகியோர் முடிச்சூர் ஊராட்சியை தமிழகத்தின் முன்னோடி ஊராட்சியாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மத்திய, மாநில அரசு விருதுகளை பெற்று தந்தனர்.

எனது தந்தையும் இந்த ஊராட்சியின் துணை தலைவராக இருந்து உள்ளார். அந்த அடிப்படையில் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் முடிச்சூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு அரசியல் சார்பற்ற சுயேச்சைகளுக்கு மக்கள் வாய்ப்பு அளித்து வருகிறார்கள். அந்தவகையில் குடியிருப்போர் நல சங்க கூட்டமைப்பு, மகளிர் சங்கங்கள் மற்றும் இளைஞர்கள் ஆதரவுடன் நான் வெற்றி பெற்று உள்ளேன். நான் சிறப்பான மக்கள் சேவை ஆற்றி, முடிச்சூர் ஊராட்சியை தமிழகத்தில் சிறந்த ஊராட்சியாக்க முயற்சி மேற்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story