ராமநாதபுரம்: காதல் தம்பதி தூக்கு போட்டு தற்கொலை


ராமநாதபுரம்:  காதல் தம்பதி தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 Oct 2021 3:53 PM GMT (Updated: 14 Oct 2021 3:53 PM GMT)

ராமநாதபுரத்தில் காதல் தம்பதி மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கிளாமரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகையா மகன் நாகராஜ்(27). இவரது மனைவி தனலட்சுமி (21). இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு  முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் காவல் நிலையம் மூலம் பெற்றோரை சமாதானப்படுத்தி அதே ஊரில் நாகராஜ் பெற்றோர் வீட்டில் வசித்து வந்து உள்ளனர்.

தனலட்சுமி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் மின்விசிறியில் தூக்கிட்டு இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

நாகராஜ் தற்போது விருதுநகர் மாவட்டம் ரெட்டியபட்டியில் ஒரு உணவகத்தில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி நர்சிங் முடித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.

தனலட்சுமியின் பெற்றோர் அவருக்கு வேறு நபருடன் திருமணம் செய்து வைக்க இருந்த நிலையில் தங்கள் மகள் ஒரு சமையல் மாஸ்டர் உடன் திருமணம் செய்து கொண்டதால் தனலட்சுமியின் பெற்றோர் தங்கள் மகள் மீது கடும்  அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தனலட்சுமி நாகராஜ் பெற்றோருக்கு இடையே அவ்வப்பொழுது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தங்கள் காதல் திருமணம் காரணமாக பிரச்சனை  தொடர்ந்து வருவதால் கணவன் மனைவி  இருவரும் மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறை தரப்பில்,தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story