குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது
x
தினத்தந்தி 15 Oct 2021 8:18 PM GMT (Updated: 15 Oct 2021 8:18 PM GMT)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடந்தது.

குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா இந்த ஆண்டு கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முக்கிய விழா நாட்களிலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

விழாவையொட்டி பல்வேறு ஊர்களிலும் விரதம் இருந்த பக்தர்கள் காப்புக்கட்டி, நேர்த்திக்கடனாக பல்வேறு சுவாமிகளின் வேடங்களை அணிந்து, அந்தந்த ஊர்களில் காணிக்கை வசூலித்தனர்.

சூரசம்ஹாரம்

தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான நேற்று இரவில் நடந்தது. இதையொட்டி காலை அம்மனுக்கு பாலா பிஷேகம் நடந்தது. நள்ளிரவு 12 மணியளவில் கோவில் சிம்மவாகனத்தில் எழுந்தருளி அம்மன் தன்னுடன் போரிட வந்த மகிஷாசூரனை சூலாயுதம் கொண்டு வதம் செய்தார். சூரசம்ஹாரம் முடிந்ததும் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.

எளிமையாக நடந்தது

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 2-வது ஆண்டாகவும் பக்தர்கள் பங்கேற்பின்றி, கோவிலின் முன்பாக சூரசம்ஹாரம் எளிமையாக நடைபெற்றது. விழா நிகழ்ச்சிகள் யூ-டியூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.

தொடர்ந்து இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இன்று, காப்பு களைதல்

11-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் கோவில் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் உள்பிரகாரத்தில் அம்மன் வலம் வந்து மீண்டும் கோவிலை சேர்கிறார். மாலையில் கோவிலில் கொடியிறக்கப்பட்டவுடன் அம்மனுக்கு காப்பு களையப்படுகிறது.

விழாவின் நிறைவு நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Next Story