அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட மாநாடு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட மாநாடு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Oct 2021 12:14 AM GMT (Updated: 16 Oct 2021 12:14 AM GMT)

அ.தி.மு.க.வின் பொன் விழாவையொட்டி பிரமாண்ட மாநாடு நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

சென்னை,

எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி அ.தி.மு.க. என்ற மகத்தான இயக்கத்தை தொடங்கியபோது ஏற்பட்ட அரசியல் எழுச்சியும், புத்துணர்ச்சியும் இன்றும் தொடர்வது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது.

அ.தி.மு.க. தொடங்கப்பட்டதன் 50-ம் ஆண்டு விழாவை தமிழ்நாட்டிலும், கட்சி அமைப்புகள் செயல்பட்டு வரும் பிற மாநிலங்களிலும் ஆண்டு முழுவதும் கொண்டாட தீர்மானிக்கப்பட்டு உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

அதன் விவரம் வருமாறு:-

பிரமாண்ட பொன் விழா மாநாடு

* அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டை சிறப்பித்திடும் வகையில் பிரமாண்டமான மாநாடு நடத்தப்படும்.

* பொன் விழா கொண்டாட சிறப்பு லட்சினை (லோகோ) வெளியிடப்படும். பொன்விழா லட்சினை பதிக்கப்பட்ட, தங்க முலாம் பூசப்பட்ட பொன்விழா பதக்கங்கள் அ.தி.மு.க. முன்னோடிகளுக்கு அணிவிக்கப்படும்.

* அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்காக தொண்டாற்றும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், கலைத்துறையினர் உள்ளிட்டோருக்கு இந்த பொன் விழா ஆண்டு முதல் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது பெயர்களில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.

* கட்சியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, விளையாட்டு போட்டி ஆகியவற்றை மாநிலம் முழுவதும் நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு அ.தி.மு.க.வின் சார்பில் நடத்தப்படும் பொன் விழா மாநாட்டில் சான்றிதழும், பரிசும் வழங்கி சிறப்பிக்கப்படும்.

வரலாற்று முக்கிய நிகழ்வுகள்

* அ.தி.மு.க. தொடங்கிய நாள் முதல் இன்று வரை கட்சியின் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை ‘‘மக்கள் தொண்டில் மகத்தான 50 ஆண்டுகள்” என்ற தலைப்பில் குறிப்பேடாக அச்சடித்து வழங்கப்படும்.

* தலைமை கழக பேச்சாளர்கள் மற்றும் கலைக்குழுவினரை கவுரவித்து, உதவிகள் செய்யப்படும்.

* ஒவ்வொரு மாவட்டத்திலும் அரங்க கூட்டங்கள் நடத்தி, அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆரம்ப கால உறுப்பினர்களுக்கு பொன் விழா நினைவு நாணயம், பதக்கம் வழங்கப்படும். உறுப்பினர் பெயர் விவரம் எழுதப்பட்ட சான்றிதழ், பொற்கிழி அளிக்கப்படும்.

* எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பற்றியும், அ.தி.மு.க. பற்றியும் புத்தகம் எழுதி உள்ள ஆசிரியர்களை அழைத்து கவுரவிக்கப்படும்.

சூளுரை

* எம்.ஜி.ஆர். மன்றங்களில் இருந்து அ.தி.மு.க. பணிகளை தொடங்கிய மூத்த முன்னோடிகளுக்கு சிறப்பு செய்யப்படும்.

* பொன்விழாவை மேலும் சிறப்பித்திடும் வகையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவிக்கும் பல்வேறு ஆலோசனைகளையும் பரிசீலனை செய்து, இந்த பொன்விழா ஆண்டில் நிறைவேற்றப்படும்.

அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர்ந்து, மக்கள் துன்பங்கள் யாவும் அகன்று, வளர்ச்சிப்பாதையில் அமைதியான தமிழ்நாடு உருவாகிட, அ.தி.மு.க.வின் பொன் விழா ஆண்டில் சூளுரைத்து கட்சி பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்பதே எங்கள் பொன் விழா செய்தியாகும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story