நெல்லை, தென்காசி, குமரியில் கனமழை - குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு


நெல்லை, தென்காசி, குமரியில் கனமழை - குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 16 Oct 2021 10:21 PM GMT (Updated: 16 Oct 2021 10:21 PM GMT)

நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக, குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நெல்லை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதையொட்டி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை கொட்டியது.

இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. சேர்வலாறு அணையில் இருந்து தாமிரபரணியில் வினாடிக்கு 1,500 கடின அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகள் நிரம்பி வழிகின்றன.

கனமழையால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் சீறிப்பாய்ந்து கொட்டியது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் வெள்ளப்பெருக்கு காணப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்பாடு காரணமாக அருவிகளில் குளிக்க யாருக்கும் அனுமதி இல்லை. இதனால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் தொலைவில் இருந்தே அருவிகளின் அழகை பார்த்து ரசித்து சென்றனர்.

குமரி மாவட்டத்திலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் மழை வெள்ளம் வெளியேறி கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளுக்குள் புகுந்தது. தோமையார்புரம் பகுதியில் சூழ்ந்த வெள்ளத்தால் 50-க்கும் மேற்பட்டோர் குடியிருப்பை விட்டு வெளியேற முடியாமல் அந்த பகுதியில் பரிதவித்தனர்.

இதனை அறிந்த நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து வெளியேறும் வகையில் கயிறு கட்டினர். பின்னர் வெள்ளத்தில் சிக்கி பரிதவித்தவர்களை ஒவ்வொருவராக மீட்டனர். பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறும்பனை 39-வது அன்பியம் பகுதியை சேர்ந்த ஆண்டனி என்பவரின் மகன் நிஷான் (வயது17) என்ற 12-ம் வகுப்பு மாணவன் கடியப்பட்டணம் தடுப்பணையில் குளிக்க முயன்றபோது, ஆற்றில் தவறி விழுந்ததில் வெள்ளத்தில் அடித்துக் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தான். இதேபோல மேலவாழையத்துவயல் பகுதியை சேர்ந்த சித்திரைவேல் (39) என்ற தொழிலாளி காளிகேசம் பகுதியில் தரைப்பாலம் ஒன்றை கடக்க முயன்றபோது காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை தேடும் பணி நடந்தது.

Next Story