7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்


7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 17 Oct 2021 7:23 AM GMT (Updated: 17 Oct 2021 7:23 AM GMT)

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் நிலைக்கொண்டு இருக்கும் 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக 7 மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

அதன்படி, நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். திருப்பூர், திருப்பத்தூர், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் அக்டோபர் 20 முதல் மீண்டும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தில் மிதமான மழை தொடரும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக பாபநாசம் ( நெல்லை) 27 செமீ மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை-22, சிற்றாறு-20, பெருஞ்சாணி-11, மணிமுத்தாறு, சுருளக்கோட்டில் தலா 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Next Story