தொடர் விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்


தொடர் விடுமுறை: ஒகேனக்கல்லில்  குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 18 Oct 2021 12:02 AM GMT (Updated: 18 Oct 2021 12:02 AM GMT)

தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கர்நாடகம், ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்தநிலையில் ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறை என்பதால் நேற்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு சினிபால்ஸ் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் குளித்தனர். பின்னர் அவர்கள் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா, மீன் காட்சியகம், தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். அருவிக்கு செல்லும் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.

சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பரிசலில் சென்று காவிரி அழகை கண்டு ரசித்தனர். மெயின் அருவியில் தடையை மீறி ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்தனர். ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. மீன் வருவல் கடை, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை படுஜோராக நடந்தது.

சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்ததால் பஸ் நிலையம், அஞ்செட்டி செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பரிசல் துறை, நடைபாதை, மசாஜ் செய்யும் இடம், பஸ் நிலையம் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story