லஞ்ச ஒழிப்பு சோதனை என்ற பெயரில் தி.மு.க. அரசு கோரத்தாண்டவம் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி கண்டனம்


லஞ்ச ஒழிப்பு சோதனை என்ற பெயரில் தி.மு.க. அரசு கோரத்தாண்டவம் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி கண்டனம்
x
தினத்தந்தி 18 Oct 2021 11:16 PM GMT (Updated: 18 Oct 2021 11:16 PM GMT)

அ.தி.மு.க. பொன் விழா கொண்டாட்டங்களை பொறுக்க முடியாமல் லஞ்ச ஒழிப்பு சோதனை என்ற பெயரில் தி.மு.க. அரசு கோரத்தாண்டவம் ஆடி கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களிலும், அவரது உறவினர்கள் வாழும் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்ற பெயரில் தி.மு.க. அரசு, தனது பழிவாங்கும் உணர்ச்சிகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி வக்கிர நடவடிக்கைகள் மூலம் தற்காலிக மகிழ்ச்சியை தேடி இருப்பது கண்டனத்துக்கு உரியது.

அலைகடல்

அ.தி.மு.க. பொன்விழா கொண்டாடி வரும் எழுச்சிமிகு தருணத்தில் சென்னையிலும், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் நடைபெற்ற உற்சாகமான விழாக்களை கண்டு மனம் பொறுக்க முடியாத தி.மு.க. விடிந்தவுடன் காவல்துறையை ஏவிவிட்டு லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில் கோரத்தாண்டவம் ஆடி கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க. ஆழம் காணமுடியாத அலைகடலுக்கு ஒப்பான பேரியக்கம். இந்த இயக்கம், தி.மு.க.வின் முயற்சிகளால் முடங்கிடவோ, முடியாமற்போகவோ, ஓய்ந்து சாயப்போவதோ இல்லை.

எத்தனை வழக்குகள் போட்டாலும்...

அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது என்னென்ன வழக்குகள் போட்டாலும், அவதூறு பரப்பினாலும், அ.தி.மு.க. எதிர்காலத்தில் அடையப்போகும் வெற்றிகளை யாராலும் தடுத்து நிறுத்துவிட முடியாது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story