சார்ஜா, துபாயில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்


சார்ஜா, துபாயில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Oct 2021 8:45 PM GMT (Updated: 19 Oct 2021 8:45 PM GMT)

சென்னை விமான நிலையத்துக்கு சார்ஜா, துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை விமான நிலையத்திற்கு துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜா மற்றும் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னை, ராமநாதபுரம், திருச்சி மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளை சேர்ந்த 6 பேர் விமான நிலையத்தில் இருந்து சுங்க இலாகா அதிகாரிகளின் கண்ணில் படாமல் வெளியே செல்ல முயன்றனா்.

இதைக்கண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அந்த 6 பேர் மீதும் சந்தேகம் கொண்டு தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

ரூ.1½ கோடி தங்கம்

அப்போது அவர்கள் தங்களிடம் சுங்கவரி செலுத்த கூடிய வகையில் எந்த பொருளும் இல்லை என்றனர்.

சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்த போது, 6 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தன. தங்கம் எதுவும் இல்லாததால் தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தனர். அப்போது 6 பேரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து இருப்பதை கண்டுபிடித்தனா்.

இதையடுத்து 6 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 670 கிராம் தங்கம் மற்றும் எலக்டரானிக் பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், தங்கத்தை யாருக்காக கடத்தி சென்றனர்? என 6 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Next Story