நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு


நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x
தினத்தந்தி 20 Oct 2021 12:00 AM GMT (Updated: 20 Oct 2021 12:00 AM GMT)

நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன்கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலைபணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். திட்டமிட்டுள்ள காலத்துக்குள் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

சென்னை,

சென்னை மக்களின் அன்றாட குடிநீர் தேவையை கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமைத்துள்ளது.

தமிழ்நாட்டில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன்கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் முதல் நிலையம், கருணாநிதியால் 2010-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. 2-வது நிலையமாக சென்னை கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலியில் ரூ.805 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன்கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அப்போதைய துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் 23.2.2010 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, 2013-ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது.

மு.க.ஸ்டாலின் ஆய்வு

நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன்கொண்ட இந்த கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை மு.க.ஸ்டாலின் நேற்று பேட்டரி காரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தென் சென்னையில் அமைந்துள்ள வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளாகத்தை சார்ந்துள்ள பகுதிகளுக்கு குழாய் கட்டமைப்புகள் மற்றும் நீரேற்று நிலையங்கள் வாயிலாக மக்களுக்கு வழங்கப்பட்டு, சுமார் 10 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

அதனைத்தொடர்ந்து, நெம்மேலியில் ரூ.1,259 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன்கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்காக நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து, இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ள ஏப்ரல் 2023-க்குள் முழுமையாக முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

குழாய் பதிக்கும் பணி

மேலும், இந்த திட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து பல்லாவரம் வரை குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. முட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வரும் குழாய் பதிக்கும் பணிகளையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த திட்டத்தின் வாயிலாக பெறப்படும் குடிநீர் மூலம், தென்சென்னை பகுதிகளான உள்ளகரம்-புழுதிவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், புனித தோமையார் மலை, பல்லாவரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வழித்தட பகுதிகளை சேர்ந்த சுமார் 9 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

இந்த நிகழ்வில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் சி.விஜயராஜ்குமார், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஏ.ஆர்.ராகுல்நாத், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குனர் பி.ஆகாஷ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story