காதல் விவகாரத்தில் பயங்கரம்: புதுமாப்பிள்ளை தலை துண்டித்து படுகொலை


காதல் விவகாரத்தில் பயங்கரம்: புதுமாப்பிள்ளை தலை துண்டித்து படுகொலை
x
தினத்தந்தி 20 Oct 2021 8:20 PM GMT (Updated: 20 Oct 2021 8:20 PM GMT)

எட்டயபுரத்தில் காதல் விவகாரத்தில் மிளகாய்பொடி தூவி புதுமாப்பிள்ளை தலை துண்டித்து படுகொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள குமாரகிரிபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராஜ். இவருடைய மகன் சூரியராகவன் (வயது 31). இவர் எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரி எதிரே டி.வி. மெக்கானிக் கடை வைத்து உள்ளார். இவரது மனைவி மகாலட்சுமி. நேற்று காலையில் வழக்கம்போல் சூரியராகவன் தனது கடையை திறந்தார்.

தலை துண்டித்து கொலை

அப்போது, கடைக்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் கண் இமைக்கும் நேரத்தில் சூரியராகவன் முகத்தில் மிளகாய் பொடியை தூவினார். அவர் சுதாரிப்பதற்குள் கீழே தள்ளிய அந்த வாலிபர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சூரியராகவன் கழுத்தை ஆடு அறுப்பது போல் அறுத்து கொலை செய்து, தலையை துண்டித்து அங்கேயே போட்டுச்சென்றார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொடூர படுகொலையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுமாப்பிள்ளை

இந்த படுகொலை தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.எட்டயபுரம் அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் ஆனந்தராஜ் (22). இவர் ஊரில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். ஆடு அறுக்கும் தொழிலுக்கும் சென்று வருவாா். அப்போது, மகாலட்சுமியை ஆனந்தராஜ் ஒருதலையாக காதலித்தாக கூறப்படுகிறது. இதற்கிடையே மகாலட்சுமி எட்டயபுரத்தில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடைக்கு வந்தபோது, சூரியராகவனுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சூரியராகவன், மகாலட்சுமி ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். இது ஆனந்தராஜிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் சூரிய ராகவனை கொலை செய்ய ஆனந்தராஜ் திட்டம் தீட்டினார்.

ஆடு அறுக்கும் கத்திகள்

அதன்படி, கடந்த 10 நாட்களுக்கு முன்பு சூரியராகவன் கடைக்கு வந்த ஆனந்தராஜ் தனது டி.வி.யை பழுது நீக்கி தரும்படி கூறினார். இந்த நிலையில் சூரியராகவன் டி.வி. பழுது சரிசெய்யப்பட்டது. நீங்கள் வந்து டி.வி.யை பெற்றுக்கொள்ளுங்கள் என்று ஆனந்தராஜிடம் செல்போனில் கூறினார். இதையடுத்து நேற்று காலையில் ஆனந்தராஜ் ஒரு பையில் ஆடு அறுக்க பயன்படுத்தும் 2 கத்திகள், மிளகாய் பொடி பாக்கெட் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கடைக்கு வந்தார்.

வாலிபர் கைது

அங்கு ஆனந்தராஜ் மிளகாய் பொடியை சூரியராகவன் முகத்தில் தூவி, அவரை கத்தியால் கழுத்தை அறுத்து தலை துண்டித்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த ஆனந்தராஜை கைது செய்தனர்.

Related Tags :
Next Story