வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு


வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x
தினத்தந்தி 20 Oct 2021 11:17 PM GMT (Updated: 20 Oct 2021 11:17 PM GMT)

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரியின் நீர் இருப்பு மற்றும் உறுதி தன்மை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். சென்னை மாநகரத்துக்கு குடிநீர் வழங்கும் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரி 21.20 அடி உயரமும், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டதாகும். தற்போது புழல் ஏரியில் 18.88 அடி உயரமும், 2,786 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

சென்னை மண்டலத்துக்கு வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு வெள்ளத்தடுப்பு பணிக்காக மொத்தம் ரூ.11.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் புழல் செங்குன்றம் ஏரியின் உபரிநீர் கால்வாய், அம்பத்தூர் ஏரி உபரி நீர் கால்வாய், தனிகாச்சலம் நகர் கால்வாய் ஆகியவற்றுக்கு ரூ.77.50 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளத்தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கால்வாயில் உள்ள நீர்த்தாவரங்கள் மற்றும் ஆகாய தாமரைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி தண்ணீர் தடையில்லாமல் செல்ல ஏதுவாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி

அதனைத்தொடர்ந்து, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு மற்றும் உறுதித்தன்மை குறித்தும், ஏரியின் 5 மற்றும் 19 கண் கொண்ட மதகுகளில் உள்ள அடைப்பான்களை ரூ.2 கோடியே 24 லட்சம் செலவில் சீரமைக்கும் பணிகளையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, அந்த பணிகளை விரைந்து முடிக்கவும், வடகிழக்கு பருவமழையொட்டி ஏரியின் கரைகளை தொடர்ந்து கண்காணித்திடவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார். மேலும், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி போன்ற முக்கிய ஏரிகளில் உள்ள அனைத்துவிதமான கழிவுகளையும் அகற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் நீர் நிலைகளில் செம்பரம்பாக்கம் ஏரி முக்கியமானதாகும். செம்பரம்பாக்கம் ஏரி தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய ஏரிகளுள் ஒன்றாகும்.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து இனைப்பு கால்வாய் மூலமாக கிருஷ்ணா நீரை கொண்டு வருவதற்கு ஏதுவாக இந்த ஏரி பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏரி சென்னைக்கு குடிநீர் வழங்கும் 2-வது கடைநிலை ஏரியாகும். மேலும் கிருஷ்ணா கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீரளவின் உயரத்தை 22 அடியில் இருந்து 24 அடி கொண்டதாக 2 அடி உயர்த்தியும், அதன் கொள்ளளவானது 3,120 மில்லியன் கன அடியில் இருந்து 3,645 மில்லியன் கன அடியாக 1996-ல் உயர்த்தப்பட்டது.

தற்போதைய நீரின் ஆழம் 20.77 அடியாகும். செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் வெளியேறும் கால்வாயின் மொத்த நீளம் 6,200 மீட்டர் ஆகும். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடாக ரூ.37.50 லட்சம் செலவில் மணப்பாக்கம், குன்றத்தூர், கோவூர், தந்தி கால்வாய், நத்தம் கால்வாய் ஆகிய கால்வாய்களில் உள்ள நீரியல் தாவரங்கள், ஆகாய தாமரைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி தண்ணீர் தடையில்லாமல் சென்று அடையாற்றில் கலக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

செம்பரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கும் திறனுடைய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிலையம் மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பல்வேறு ஏரிகளில் உள்ள நீரின் இருப்பு மற்றும் நகரின் குடிநீர் தேவைக்கு ஏற்ப செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீரை எடுத்து சுத்திகரித்து சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.சுதர்சனம், துரை சந்திரசேகர், கே.பி.சங்கர், கு.செல்வப்பெருந்தகை, பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் சி.விஜயராஜ்குமார், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி, திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் அ.மீனா பிரியாதர்ஷினி, நீர்வளத்துறை முதன்மை தலைமைப்பொறியாளர் கு.ராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story