ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவி: 22 வயது இளம்பெண் போட்டியின்றி தேர்வு


ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவி: 22 வயது இளம்பெண் போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 22 Oct 2021 10:45 AM GMT (Updated: 22 Oct 2021 10:54 AM GMT)

நெல்லை மானூரில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கு 22 வயது இளம்பெண் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை,

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில்  2 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் கடந்த 12-ந்தேதி எண்ணப்பட்டன.

இதில் தி.மு.க. 139 மாவட்ட கவுன்சிலர்கள், 982 பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள் பதவியிடங்களை கைப்பற்றியது. பஞ்சாயத்து தலைவர் தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க. வெற்றி வாகை சூடியது. வெற்றி பெற்ற மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் அனைவரும் கடந்த புதன்கிழமை பதவி ஏற்றனர்.

இதையடுத்து மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய பெருந்தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி நெல்லை மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. 

இதில் 19-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 22 வயது இளம்பெண் ஸ்ரீலேகா, ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கு தேர்தல் அலுவலரிடம் வேட்பு மணு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஸ்ரீலேகா போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து பதவியேற்றுக்கொண்ட அவருக்கு திமுகவினரும் பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Next Story