போலி ஆவணம் மூலம் ரூ.35 லட்சம் நிலத்தை அபகரித்த 3 பேர் கைது


போலி ஆவணம் மூலம் ரூ.35 லட்சம் நிலத்தை அபகரித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2021 10:23 PM GMT (Updated: 22 Oct 2021 10:23 PM GMT)

திருவள்ளூர் அருகே போலி ஆவணம் மூலம் ரூ.35 லட்சம் நிலத்தை அபகரித்த 3 பேரை நில அபகரிப்பு தடுப்பு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

சென்னை,

அம்பத்தூர் கள்ளிக்குப்பம் செண்பகா நகர் பகுதியை சேர்ந்தவர் லலிதா தேவி. சென்னை வில்லிவாக்கம் விநாயகர் கோவில் தெரு 5-வது தெருவைச் சேர்ந்தவர் பீட்லா சொர்ணலதா. இவர்கள் இருவரும் இணைந்து திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு ஸ்ரீராமலுபுரம் பகுதியில் 1,240 சதுர அடி பரப்புள்ள வீட்டு மனையை ரூ.25 லட்சம் விலைக்கு வாங்கினார்கள். இதை அவர்கள் முறையாக பத்திரப்பதிவு செய்து இருந்தனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் சிலர் பூஜை செய்து கொண்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, அங்கு விரைந்து சென்று கேட்டபோது, இது தங்களுக்கு சொந்தமான இடம் என தெரிவித்தனர். இது தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகம் சென்று விசாரித்த போது, அவரது வீட்டுமனையை ஆள்மாறாட்டம் செய்து சிலர் அபகரித்தது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து திருவள்ளூரில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் செய்தனர்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் உத்தரவின்பேரில், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

3 பேர் கைது

இந்த விசாரணையில், லலிதா தேவி மற்றும் பீட்லா சொர்ணலதாவுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்றதாக திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டை சேர்ந்த ஏழுமலை (வயது 45), புருஷோத்தமன் (51) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

அதேபோல பெரம்பூர் முத்துக்குமாரசாமி தெருவை சேர்ந்த மோகன் என்பவருக்கு சொந்தமான திருவள்ளூரை அருகே ஐ.சி.எப். பகுதியில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 2,400 சதுரஅடி வீட்டுமனையை சிலர் போலி ஆவணம் தயாரித்து விற்றதாக சென்னை ஜி.கே.எம்.காலனி ம.பொ.சி. தெருவை சேர்ந்த பாபு (53) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story