ஊரடங்கு கட்டுப்பாட்டில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுமா?... மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
ஊரடங்கு கட்டுப்பாட்டில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை,
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதோடு 1 முதல் 8-ம் வகுப்புகள், அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதி தொடங்க உள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்தும், ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பது குறித்தும் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம், இன்று (சனிக்கிழமை) காலை 11.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. இதில் தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, சுகாதாரத்துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளொன்றுக்கு 1,200 என்ற நிலைக்கு குறைந்துள்ளதால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள், பள்ளிகள் திறப்பு, மழை காலம் ஆகிய நிகழ்வுகளில் மேற்கொள்ள வேண்டிய தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story