நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்: அள்ளி கொஞ்ச வேண்டிய பேரனை அடித்துக்கொன்ற மதுரை பெண்


நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்: அள்ளி கொஞ்ச வேண்டிய பேரனை அடித்துக்கொன்ற மதுரை பெண்
x
தினத்தந்தி 23 Oct 2021 6:18 AM GMT (Updated: 23 Oct 2021 6:18 AM GMT)

அள்ளி கொஞ்ச வேண்டிய பேரனை மதுரை பெண் அடித்து கொன்றார். தப்பி ஓடிய அவரைபோலீசார் தேடி வருகின்றனர். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம் நாகப்பா காலனியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 31) என்ஜினீயர்.இவரது மனைவி ஐஸ்வர்யா (24). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. மதுரையில் இருந்து மகளின் பேறு காலத்துக்கு வந்த தாய் சாந்தி (45), பிறந்த 2 குழந்தைகளையும் பராமரித்து வந்தார்.இந்த நிலையில் ஐஸ்வர்யா தனது குழந்தைகளை தாய் சாந்தியை பார்க்க சொல்லி விட்டு, மருந்து வாங்குவதற்காக தனது சகோதரரை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றார்.மருந்து வாங்கி விட்டு ஐஸ்வர்யா வீடு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டிக் கிடந்தது.கதவை பலமுறை தட்டிய பிறகே சாந்தி கதவைத்திறந்து வெளியே வந்தார். அப்போது ஐஸ்வர்யா தனது குழந்தைகளை தேடி ஓடினார். அங்கு ஆண் குழந்தை பேச்சு,மூச்சு இல்லாமல் கிடந்தது. பெண் குழந்தை கதறி அழுதபடி இருந்தது. உடனே 2 குழந்தைகளையும் எடுத்துக்கொண்டு ஐஸ்வர்யா தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

அங்கு குழந்தைகளை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் ஆண் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். பெண் குழந்தைக்கு உடலில் காயங்கள் இருந்தன. இந்த நிலையில் பெண் குழந்தை மட்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய தகவலின் பேரில் துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதில் ஐஸ்வர்யாவின் தாயார் சாந்தி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். சம்பவத்தன்று ஐஸ்வர்யா மருந்து கடைக்கு சென்றிருந்த வேளையில் சாந்தி 2 குழந்தைகளையும் பலமாக தாக்கியுள்ளார். இதில் ஆண் குழந்தை இறந்தது தெரியவந்தது என்றனர்.

இதனை தொடர்ந்து தலைமறைவான சாந்தி மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் சாந்தியை வலை வீசி தேடி வருகின்றனர்.சாந்தியின் கணவர் மதுரை மதிச்சியம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். சாந்திக்கு மனநலம் பாதிப்பு இருந்த நிலையில் அவரை ஏன் மகளுக்கு பேறுகாலம் பார்ப்பதற்காக அழைத்து வந்தனர் என்பதுகேள்விக்குறியாக உள்ளது. அள்ளி கொஞ்ச வேண்டிய பாட்டியாய் பாசம் காட்ட வேண்டிய கருணை முகம், காட்டேரியாய் மாறி பேரக்குழந்தையை அடித்து கொன்ற கொடூரம் குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Next Story