2 குழந்தைகள், கணவனை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்...!


2 குழந்தைகள், கணவனை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்...!
x
தினத்தந்தி 24 Oct 2021 10:24 PM GMT (Updated: 24 Oct 2021 10:24 PM GMT)

கணவன், 2 குழந்தைகளை தவிக்க விட்ட பெண் ஒருவர் மற்றொரு குழந்தையுடன் கள்ளக்காதலனுடன் ஓடிவந்தார்.

அனுப்பர்பாளையம், 

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரத்தை அடுத்த வசந்தாநகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் புத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கி ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்துள்ளார். 

அப்போது அந்த பகுதியை சேர்ந்த 26 வயதுடைய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். தென்றல் தழுவும்போது பூக்கள் விலகுவதில்லை. மழைதுளியை மண் வெறுப்பதில்லை அல்லவா அதுபோல் இருவரும் தங்களது நிலையை மறந்து குலாவி வந்தனர். அவர்களுக்கு துணையாக செல்போனும் கை கொடுத்ததால் பேசியே வானில் பறந்தனர்.

இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி அந்த பெண் தனது 2 குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு, மற்றொரு 3 வயது குழந்தையுடன் திடீரென மாயமானார். வெளியில் சென்று வீட்டிற்கு வந்த கணவன், தனது மனைவியையும் மற்றொரு குழந்தையையும் காணாமல் அதிர்ச்சியடைந்தார். அவர்களை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனாலும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து பெண்ணின் கணவர் புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பெண்ணை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அந்த பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து கள்ளக்காதலனின் செல்போன் டவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.அப்போது அவர்கள் திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் இருப்பதாக செல்போன் டவர் காட்டியது. இதனையடுத்து புத்தூர் போலீசார் திருப்பூரில் தங்கி அவர்களை தேடி வந்தனர். மேலும் அந்த பெண், அவரின் கள்ளக்காதலன் ஆகியோரின் புகைப்படங்களை பொதுமக்களிடம் காட்டி விசாரித்தனர்.

அப்போது அந்த பெண் ஒரு 3 வயது குழந்தையுடன் அங்கேரிபாளையம் மாகாளியம்மன் கோவில் வீதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டிற்கு சென்று, பெண் மற்றும் 3 வயது குழந்தையை அங்கிருந்து மீட்டனர். பின்னர் அவருடன் இருந்த கள்ளக்காதலனையும் போலீசார் விசாரணைக்காக கர்நாடக மாநிலத்திற்கு அழைத்து சென்றனர்.

Next Story